Tuesday 28 December 2010

வேர்களுக்கு வயது ஒன்று ! ( 2009 டிசம்பர் 29 ஆம் நாள் )

 வணக்கம் !
சென்ற வருடம் இதே மாதம் இதே நாள்தான் வலைப்பூ வேர்கள் பிறந்தது. முதலாண்டை முழுமையாக நிறைவு செய்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 
ஒரு கணம் என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறேன் . சின்னஞ்சிறு வயதில் எழுத்து ஓவியம் போன்ற கலைகளில் பெரிதும் ஈர்ப்பு இருந்த போதிலும் கடந்த  30  ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியப்பணியில் மின்அணுவியலில் துறையில் மிகுந்த ஈடுபாடு கொள்ள நேரிட்டது. அரசுப் பணியிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்று தனித்து நின்ற போது என் மொழி எனக்காக காத்திருப்பதைக் காண நேரிட்டது. அதன் விளைவு வேர்கள் எனக்குத் துணையாயிற்று.
கடந்து போன காலங்களில் நெஞ்சில் நிலைத்து நின்ற நினைவுகளையும் நிகழ் காலங்களில் சந்திக்க நேர்ந்த தருணங்களையும் வருங்கால தொலை நோக்கு பார்வைகளையும் ஒரு சிலருடனாவது வேர்கள் மூலம் பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன்.
இந்த ஒரு வருட காலத்தில் எனக்கிருந்த கடமைகளுக்கிடையேயும் அவ்வப்போது குறுக்கிடுகிற பயணங்களுக்கிடையேயும் ஏறத்தாழ 36 இடுகைகளை பதிவு செய்திருக்கிறேன்.    கணினித் துறையில் போதுமான பயிறசியின்மையும் மொழியை விட்டு நெடுங்காலம் விலகியிருந்ததாலும் வேர்களை வடிவமைத்தலிலும் எழுத்தில் பிழைகளைத் தவிற்பதிலும் மிகுந்த சிறமத்தை சந்திக்க நேர்ந்தது.    மிகுதியான காலத்தையும் விரயம் செய்ய வேண்டியிருந்தது.
முதன்முதலாக இடுகைகளை பதிவிடும் போது இந்த பரந்த விரிந்து கிடக்கும் இணையத்தில் எத்தனை பேர் இந்த நீட்டோலையை திரும்பிப்பார்க்கப்போகிறார்கள் என்பதில் மிகுந்த அய்யம் இருந்ததென்னவோ உண்மை. இருந்த போதிலும் வேர்களின் எழுச்சி இந்த கோளத்தின் சகல இடுக்கிகளிலிருந்தும் எட்டிப் பார்க்கப்படுகிறது என்று அறியும் போது மிகுந்த பெரிமிதமும் ஊக்கமும் பெருகிறேன். அனைத்து தேசங்களுக்கும் புலம் பெயர்ந்த என் மொழிச் செல்வங்களுக்கும் இந்த மண்ணில் மொழிக்கு உரமாக இருப்போருக்கும் என் மகிழ்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
தங்களுக்கேற்படும் எண்ண எதிரொலிகளை
(என் நிலையாகிலும் ) அருள்கூர்ந்து மறுமொழிமூலம் வெளிப்படுத்தி வேர்களின் வளற்சியில் துணை நில்லுங்கள் !
இந்த இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் இன்னொரு மகிழ்வான செய்தியும் காத்திருக்கிறது.மிகுதியாக கேளிக்கை நிறைந்த வலைப்பூக்களுக்கிடையே
tamil 10 top sites தளத்தின் கண்மணிகள் வேர்கள் வலைப்பூவை முதல் இடத்துக்கு தூக்கிப்பிடித்திருக்கிறார்கள். மொழிமீது நீங்கள் காட்டுகின்ற
முக்கியத்துவமே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது.
 நன்றியும் மகிழ்ச்சியும் .
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து.....
இடுகை 0036      29 - 12 - 2010

Labels: , ,

மன்மதன் அம்பு - வேர்களின் பார்வை.


                                 (காத்திருந்தவனும் நேற்று வந்தவனும் )

நடிகையொருத்தியை விரும்பிக் காதலித்து நிச்சியமும் செய்த தொழிலதிபர் மதன் நடிகையின் இயல்பான கலைக்குடும்பச் சூழல்களைக் காண நேரும் போது பெரிதும் குழப்பமும் அய்யமும் அடைகிறான்.இதனையறிந்த நடிகை மனம் சிதறி சில நாட்கள் தனித்திருக்க விரும்பி வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற் கொள்ளுகிறாள்.இச்செயலால் தொழிலதிபருக்கு மேலும் அய்யம் வலுப்பெற வருங்கால மனைவியையே வேவு பாற்க துப்பறியும் வல்லுநர் மேஜர் ராஜமன்னாரை பின் தொடரச் செய்கிறான். வேவு பார்க்க பின்தொடர்ந்த ராஜாமன்னார் நடிகையின் வாழ்விலும் நிரந்தரமாக பின்தொடர நேர்ந்ததெப்படி என்று விவரிப்பதே மன்மதன் அம்பு
------------------------------------------------------------                                                                         தொழிலதிபர் மதனகுமாராக வரும் மாதவன், நடிகை அம்புஜாவாக தோன்றும் த்ரிஷா ,நடிகையை வேவு பாற்க பின்தொடரும் மேஜர் ராஜாமன்னாராக வரும் கமல்,த்ரிஷாவின் தோழி தீபாவாக வரும் சங்கீதா - இவர்களைச் சுற்றியே திரைப்படம் நகர்கிறது.
திரைப்படத்தின் துவக்கம் நடிகர் சூரியாவின் தடாலடி ஆட்டத்துடன் மிகுந்த சிரத்தையோடு படமாக்கப்பட்டிருக்கிறது. வெள்ளித்திரையில் ஒரு சில மணித்துளிகளே இடம் பெரும் ஒரு காட்சியை பதிவு செய்ய ஒரு கூட்டமே திரண்டு எத்தனை கட்டுப்பாட்டுடனும் எத்தனை பரபரப்புடன் இயங்கவேண்டியிருக்கிறது என்பதை பிரமிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.
படம் துவங்கி எறத்தாழ இருபது நிமிடங்களுக்குப் பிறகே திரையில் காலடிஎடுத்துவைக்கும் உலகநாயகனின் அறிமுகமும் முன்னதாக கொடைக்கானல் மலையுச்சியில் நிகழும் கார் விபத்தையும் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.அது போலவே கமலின தீரா துயரத்துக்கு காரணமான கோர விபத்தை பின்னோட்டமாக வெளிப்படுத்தி இயக்குநர் ரவிக்குமார் மனதில் இடம் பிடிக்கிறார். இதை விடுத்து திரைப்படத்தின் இதர பகுதிகள் பெரும்பாலும் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் கேமரா பார்த்த திசையிலேயே ஊர்ந்து ஊர்ந்து செல்லுகிறது. பெரும்பாலான காட்சிகள் அய்ரோப்பிய தேசத்தின் இட்டாலி,ரோம்,பார்சிலோனியா,வெனீஸ் போன்ற பெரு நகரங்களிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.
மாதவன்,த்ரிஷா,கமல்,சங்கீதா அத்தனைபேரும் தங்களுக்கிட்ட பணியை சிறப்புரவே செய்திருக்கின்றனர்.மற்ற துணைப்பாத்திரங்கள் தங்கள் பங்கை சிறப்புர செய்தாலும் அவையனைத்தும் கூடுதல் சேர்க்கையாகவே தோன்றுகிறது.மாதவனின் நடிப்பு கமலின்இதர படங்களின் நகைச்சுவை நடிப்பையே மிஞ்சி நிற்கிறது.நடிகையாகத் தோன்றும் த்ரிஷாவின் நடிப்பு இயல்பாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. தன்னுடைய குரலையே இத்திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக அறிய நேர்ந்தது. இனியும்கூட தொடரலாம் என்றே நினைக்கிறேன். சங்கீதாவின் நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி காணப்படுகிறது. நடிகைகளின் நடிப்பில் மட்டுமின்றி தோற்றத்திலும் முதிர்ச்சி காணமுடிகிறதே, ஒரு வேளை ஒப்பனையின் குறைபாடாக இருக்கலாமோ. இந்த படத்தைப் பொருத்தவரையில் உலக நாயகனின் நடிப்பில் நல்ல மாற்றத்தக் காணமுடிகிறது.மிக மிக இயல்பான நடிப்பு.வழக்கமான மிகு நடிப்பைத் தவிர்த்து இயல்பாக செய்திருப்பது மிகவும் மனதை ஈர்ப்பதாக இருக்கிறது. நீலவானம் என்ற பாடலின் இசையும் அதற்கென அமைக்கப் பெற்ற யுத்தியும் மனதைக் கவ்வி இழுக்கிறது. ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனுக்கு நல்ல வருங்காலம் காத்திருப்பதை காண முடிகிறது. இருந்த போதிலும் இயக்குநர் ரவிகுமாரை முழுமையாக காண முடியாற் போனது துரதிஷ்டம்தான்.ஏறத்தாழ முப்பது கோடிக்கு மேல் செலவழித்து அன்னிய மண்ணிலும் பிரமிக்கத்தக்க கப்பற்தளத்திலும் படமாக்கப் பெற்ற இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா கடைசி வரை அணிந்துவரும் குட்டைப் பாவடையை விட மிக மிகச் சிறியதாகவே இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. மெல்லிய இழையாக ஓடும் இத்திரைக் கதையை மேலும் மேலும் இழுத்து இறுதியில் ஏதோ அவசரம் கருதி திடீரென்று முடித்து விட்டதாகவே தோன்றுகிறது.
கமலின் துயரத்துக்கு தலையாய காரணமான கொடைக்கானல் கோர விபத்து மாதவன் த்ரிஷா ஊடலினாலேயே நிகழ்ந்தது என்ற ஒன்றைத்தவிற திரைக்கதையில் மனதில் நிற்கும் மையக்கருத்து வேறு எதுவுமில்லை என்றே சொல்லவேண்டும்.திரைவசனத்திலும் ஒன்றிரண்டு உரையாடல்களைத் தவிற மற்றவை அனைத்தும் மூன்றாம் தரமே.திரைப்படத்தின் பெயருக்கான காரணத்தைப் போலவே திரைப்படத்தின் பின்பகுதி அனைத்தும் நகைச்சுவை என்ற பெயரில் அபத்தமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற உரையாடல்களை வைத்துக்கொண்டு சென்னை சபாக்களில் அமெச்சூர் நாடகம் போடலாமே தவிற ஒரு முழுமையான வெற்றி படத்தை உருவாக்க உதவாது என்பதை அய்ம்பது ஆண்டுகால அனுபவம் மிக்க கமல் ஏன் உணராமற் போனார் என்பது புரியவில்லை.அன்னிய தேசங்களின் கண்கொள்ளா காட்சிகளை நம்பி எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் நட்டமின்றி ஓடினாலும் ஒரு டாக்குமென்ட்ரியின் தகுதியையே பெறக்கூடும் என்பதை ஏன் உணரவில்லை..படம் முழுதும் குட்டைப்பாவாடையோடு த்ரிஷா வலம் வந்தாலும் விரசம் வெளிப்படவில்லை என்பதை குறிப்பிடத்தான் வேண்டும்.
இன்றைய மக்களின் ரசனை பெரிதும் குறைந்தே காணப்படுகிறது.பணம் பதவி இவற்றைத் தவிர்த்து மற்றெந்த விஷயங்களிலும் எதிர்பார்ப்பு குறைவாகவே இருக்கிறது.சமரசம் செய்து கொள்வதில் முன்னிலையே வகிக்கிறார்கள்.அவர்களை எண்ணி இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வரலாம். போதுமான லாபமும் ஈட்டலாம். ஆனால் முழுமையான திரைப்பட வரிசையில் அவைகள் இடம் பெறா.
வெருமனே பொழுதைக்கழிக்க விரும்புவோர் அனைவரும் ஒருமுறை பார்க்கலாம். 
---------------------------------
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து ...
..
இடுகை 0035

Labels: , ,

Thursday 23 December 2010

ஈரோட்டு வலைப்பதிவாளர் சங்கமம்

வாழ்த்தும் வேண்டுதலும் !

இன்னும் இரண்டே நாட்கள்தான் மிச்சமிருக்கிறது ! வருகிற டிசம்பர் 26 தேதி தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அந்த பகுதியைச் சார்ந்து ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் இணையத்தின் பதிவாளர்கள் அத்தனைபேரும் ஒன்று கூடி புதிய சங்கமம் ஒன்றை நிகழ்த்தப்போகிறர்கள். வலைப்பூ குழுமம் ஒன்றும் ஏற்படப்போகிறது. வலைபூ வளற்சிக்கும் இணையத் தமிழுக்கும் தடையாயிருக்கிற பெருங்கற்களை நாள் முழுதும் கூடி பொறுக்கப் போகிறார்கள். நினைத்தாலே நெஞ்சம் முழுதும் பூரிக்கிறது ! உண்மையிலேயே வலைப்பூக்களின் வசீகரத்தை உணர்ந்தவர்கள்தாம் இப்படி ஒரு பூரிப்பை உணர முடியும். என்னுடைய இயல்பான பூரிப்புக்கு காரணம் அது மட்டுமல்ல. என் கடந்த கால வாழ்வுக்கு ஈரோடு நகரமே ஆதாரமாய் இருந்திருக்கிறது.அந்த பசுமையான நினைவுகளை பின்னர் எழுதப்போகிறேன்.
நடக்கப்போகிற சங்கமத்துக்கு ஈரோட்டு பதிவாளர்கள் எப்போதோ தயாராகி விட்டதை ஈரோடு கதிரின் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. எத்தனை தூரம் விழுந்து விழுந்து ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து எழுதப்படும் பதிவுகளில் காண முடிகிறது. விழா நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வடிவமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளித்திருப்பதை காணும்போது சங்கமம் அடையப்போகும் சிகரத்தை இப்போதே பார்க்கமுடிகிறது. நாள் முழுதும் நிகழப்போகும் ஆய்வுகளுக்கிடையில் வயிற்றுக்கும் ஈய அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறது. தொலைவிலிருந்து வரவிருக்கும் பதிவர்கள் வசதிக்காக பிரத்தியோக பதிவர்களை நியமித்திருப்பது திட்டமிடலின் சிறப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னையில் இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த எடுத்துக்கொள்ளப்பட் முயற்சி
முளையிலேயே முறிந்து போனது ஒருவகைஏமாற்றமானதுதான். இதற்கு தலையாய கரணம் வலைப்பூக்களுக்கு உலகளாவிய அங்கிகாரமும் வானளாவிய சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமேதான்.
வலைபூ என்பது ஒரு எண்ணியலில் எழுதப்படும் நாட்குறிப்பே . அதில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். யாரையும் கட்டுப்படுத்தாது.-- என்ற போக்கில் ஒரு சக பதிவர் எழுதியதையும் படித்திருக்கிறேன்.
வலைப்பூ எண்ணியல் நாட்குறிப்பாக இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நீங்கள் மட்டுமே படிக்கிற வரையில். அடுத்தவர்மேல் உரசாத வரையில்.நாட்குறிப்பு சி. பி. அய் வசம் சிக்காத வரையில். கட்டுப்பாடற்று பாய்வது காட்டாறு என்று கூரக்கேட்டிருக்கிறேன்.மனித இனம் அத்தகயதன்று. ஒருவகைக் கட்டுபாட்டுடன் சுதந்திரத்தை நுகர்வதே மனிதகுலத்தின் உயர்வு. ஒவ்வோரு தனிமனிதற்கும் தனித்தனியே சுய சிந்தனைகள் உண்டு.அவரவர் போக்கில் பயணிப்பதும் உண்டு.வானளாவிய உரிமை பெற்ற அத்தனை பதிவர்களையும் ஒரு கூண்டுக்குள் சிறையிடுவது என்பது ஊசி முனையில் ஒட்டகத்தை நுழைப்பதற்கு சமமானது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.இருந்தபோதிலும் இந்த தேசத்தை மாறுபட்ட பல்வேறு கட்சிகள் துணையோடு குறைந்தபட்சக் கருத்தொற்றுமையுடன் ஆட்சி செய்த பாரதீயஜனதாவைப் போல பல்வேறு மாறுபட்ட கட்சிகளோடு இணைந்து இன்றும் ஆளுகின்ற மன்மோகன் அரசைப்போல குறைந்தபட்ச கருத்தொற்றுமையுடன் அனைத்து பதிவர்களும் இணைந்து செயல்படுவது மண்ணுக்கும் மொழிக்கும் அவசியம் என்றே கருதுகிறேன்.எழுத்தின் போக்கில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. தனித்தமிழில் எழுதுவது. வட்டாரவழக்கில் வரைவது.நகைச்சுவையோடு எழுதுவது. கனவுகளை கவிதைகளாக வடிப்பது.அவலத்தை அள்ளித்தருவது. காரசாரமாக எழுதுவது . ...கண்டபடி எழுதுவது. இவற்றில் உங்கள் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றை மட்டும் கவனியுங்கள்.உங்கள் எழுத்துக்களை பொன்போன்ற காலத்தைச் செலவிட்டு எத்தனையோ நாடுகளில் வாசிக்கிறார்கள். உங்கள் வலைதளம் நீங்கள் மட்டுமே வாசிக்கின்ற எண்ணியல் நாட்குறிப்பல்ல .
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு நெருப்பாயிருங்கள் ! அவர்கள்தம் சுயவாழ்வை விமர்சிப்பதைத் தவிருங்கள்..ஏனெனில் அவர்கள் மண்ணில் தோன்றிய மகாத்மாக்கள் அல்ல .அவர்களும் நம்மைபோன்று சாதாரண மனிதர்களே.நம்மைவிட சில துறைகளில் பளிச்சிடுகிறார்கள்.அவ்ளவுதான்.
இன்று நாம் உச்சியில் வைத்து கொண்டாடும் பெரும்பாலானவர்கள் சுயவாழ்வில் மிகவும் ஒழுக்கமற்றவர்களே.
அடுத்து பாலுணர்வு ஊட்டும் எழுத்துக்களை மட்டுமே திரும்பத்திரும்ப எழுதுவதைத் தவிற்த்து மண் மற்றும் மொழி சார்ந்த பெருமைகளையும் இன்னும் முடிவுகள் கிட்டாத அவலங்களையும் சித்தரியுங்கள்.
கூகுளின் தேடுதலில் தமிழ் எழுத்துக்களை பொறுத்தியவுடன் அது பிதுக்கித் தள்ளுகின்ற அத்தனை வார்த்தைகளும் அன்னை தமிழுக்கு அணி சேர்ப்பதாயில்லை. இந்த தேசத்தின் செல்வங்கள் இதைத்தானா தேடின என்ற வருத்தம் என்னைவிட்டு இன்னும் அகலவேயில்லை.. இந்த தீராத தலைகுனிவுக்கு தமிழ் இணைய வல்லுநர்களின் வழிதான் என்ன.ஈரோடு சங்கமம் சரியான பாதையை சுட்டிக்காட்டட்டும்.
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து....
23 12 2010
--------------------------------
இடுகை 0034 

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !
Dear Sir, You are 100% correct. Please try to come to Erode sangamam.
By அமர பாரதி on ஈரோட்டு வலைப்பதிவாளர் சங்கமம் on 24/12/10

அன்பிற்கும் பகிர்ந்தமைக்கும் நன்றிங்கசங்கம நிகழ்வுகளை இங்கே காணலாம். http://www.erodekathir.com/ அன்புடன் ஆரூரன் விசுவநாதன்


Labels: , ,

Wednesday 8 December 2010

சக்கர நாற்காலிக்கு ஒரு சறுக்கல் !

சக்கர நாற்காலிக்கு ஒரு சறுக்கல் !
( ஸ்பெக்ட்ரம் ஊழல் -- தினமணியின் அவசரம் -- விகடனின் பரபரப்பு -- ஞானியின் பிதற்றல் )
பாண்டியன்ஜி
தினந்தினம் பாராளுமன்றத்தை தள்ளி வைத்து தள்ளிவைத்து பாராளுமன்றக்கட்டிடமே அரித்துவாருக்கருகில் நகர்ந்து போயிருப்பதாக அண்மையில் வெளியான ஓர் கேலிச்சித்திரத்தைக் கண்டு வெகுவாக ரசித்தேன். தினமலர் நாளிதழில் வெளியான அந்த கேலிச்சித்திரம் என்னையறியாமல் என்முகத்தில் ஏற்பட்ட புன்முறுவலுக்கு காரணமாய் அமைந்தது..
நாள் முழுதும் -
ஹோ ... என்ற பேரிரச்சல். கைகளை மேலே தூக்கியவாறு இறுக்கைகளை விட்டு இங்கும் அங்கும் ஓடும் காட்சி .
அனைத்துக்கும் மெல்லிய புன் முறுவலோடு கைகளை அசைத்து அமரச்சொல்லும் பாபுஜியின் புதல்வி மீராகுமாரின் காட்சி . பயனின்றிப்போக.. அடுத்த
சில நிமிடங்களில் எழுந்து அவைக்குப்பின்னால் மறையும் தோற்றம்...
நாள்தோரும் கண்டு சலித்துப்போன தொலைக்காட்சி.
கடந்த 18 நாட்களுக்கு மேலாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சிகளால் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தாங்கள் எழுப்புகின்ற அத்தனை கோரிக்கைகளுக்கும்ஆளும் அரசு அடிபணிய வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் முரட்டுத்தனமான பிடிவாதம்.
 ஆளுகின்ற அரசு எந்தக்கட்சியைச் சார்ந்தது என்ற அடிப்படையே சந்தேகத்திற்குரியதாக்கப்பட்டிருந்து. ஒருவேளை ஆளுகிற அரசுக்குத் தேவையான பெரும்பான்மை
இல்லாமற்போய் விட்டதோ என்றும் எண்ணத்தோன்றியது.
எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துஆட்சிபீடத்த்தில் அமர இந்த துருப்புச்சீட்டை ஒருபோதும் கைவிடலாகாது என்பதில் எதிர்கட்சிகள் அனைத்தும் உறுதியாக நின்றன. நாடாளுமன்ற இரு அவைகளையும் தொடர்ந்து முடக்குவதன்மூலம் இந்த தேசத்துக்கேற்படும் நஷ்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதையும் அது இவர்கள் சுட்டிக்காட்டுகிற ஸ்பெக்ட்ரம் யூக ஊழல் கணக்கின் மதிப்பைக்காட்டிலும் பல்மடங்கு பெருகக்கூடும் என்பதையும் இவர்கள் உணர்வதாக தெரியவில்லை.
இதே போன்ற கோரிக்கைகளை இதற்குமுன்னால்இவர்கள் ஆளும் பீடத்தில் இருந்தபோது எப்படி எதிர்நோக்கினார்கள் என்பதைக்கூட எண்ணிப்பார்த்ததாக தெரியவில்லை.
மத்திய மாநில அரசுகளின் ஒவ்வொரு இலாக்காகளிலிருந்து கிடைக்கப்பெருகிற எண்களை அடிப்படையாகக்கொண்ட தகவல்களைத்தணிக்கைக்குட்படுத்தி புதிய எண்ணிக்கையைக் கண்டறிந்து குற்றங்குறைகளை சுட்டிக்காட்டி சம்மந்தப்பட்ட இலாக்காக்களுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கமான ஒன்றுதான்.அறிக்கைகளில் காட்டப்பெற்ற குறைகளை நிவர்த்தி செய்து பதிலறிக்கை சமர்ப்பிப்பது சம்மந்தப்பட்ட
இலாக்காவின் கடமை.
பெரும்பாலும் இது போன்று குறைகள் சுட்டிக்காட்டப்பெரும் தணிக்கை அறிக்கைகளை அரசின் எந்தவொரு இலாக்காவும் இதுவரை ஒரு பொருட்டாகவே
கருதியதில்லை என்பதுதான் உண்மை.
இந்த முறை தொலைத்தொடர்புத்துறைக்கு தரப்படவேண்டிய இதுபோன்றவொரு தணிக்கை அறிக்கை மாறாக இந்திய பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் முன்னதாகவே கிடைத்திருக்கிறது. இந்திய பத்திரிக்கைகளோ இலாக்கா அரசு நீதிமன்றம் இவைகள் அனைத்தையும் தாண்டி
தலைமை வகித்த அமச்சரையே குற்றவாளியாக்கி பின் தீர விசாரிக்கத் துவங்கியிருக்கின்றனர்.யூகங்களையே முடிவாக்கி திரும்பத்திரும்ப கொட்டை எழுத்தில் அச்சிடுவதன் மூலம் விற்பனையையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சம்பந்த்ப்பட்ட இலாக்கா அமைச்சர் முழுமையாக ஊழல் புரிந்திருக்கலாம் அல்லது தவறான வழிகாட்டுதலின் மூலம் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அரசின் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளினால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.அல்லது இலாக்கா ஊழியர்கள் இந்த இழப்புக்கு காரணமாயிருக்கலாம்.
கண்களால் காண்பது காதுகளால் கேட்பது இவைகளைத் தவிர்த்து தீர ஆய்ந்து அறிவதே அறிவு.
இருந்த போதிலும் -
எதிர் கட்சிகளின் கடுமையான கோரிக்கைக்கிணங்கி சம்பந்தப்பட்ட அமைச்சரும் பதவி விலகியிருக்கிறார். அதுமட்டுமன்றி
ஸ்பெக்ட்ரம் பிரச்சனை நீதிமன்றத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது. நீதிமன்றமும் தன் விசாரணையைத் துவக்கி விட்டது.நாட்டுக்கேற்பட்ட அல்லது ஏற்படயிருந்த நஷ்டத்தையும்அதன் மூலம் ஆதாயம் அடைந்த அத்தனை பேர்வழிகளையும் நீதிமன்றம் அடையாளம் காட்டவேண்டும். ஊழல் நிறைந்த இந்த தேசத்தின் ஒரே நம்பிக்கை இன்று மிச்சமிருக்கிற நீதிமன்றங்களே.
இதற்குள் இந்த தேசத்தின் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மட்டுமின்றி அரசியல் நோக்கர்களும் தங்கள் பங்குக்கு பல்வேறு கோணங்களில்
குற்றங்களையும் அதற்கான தண்டனையையும் அதன் மூலமாக கலைஞருக்கும் அவர் கட்சிக்கும் ஏற்படக்கூடிய சரிவையும் அதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் பரவலக வெளிப்படுத்தத் துவங்கிவிட்டனர்.
வேஷ்டி கட்டிக்கொண்டு டெல்லிக்கு போனால் எத்தனை கேவலமா பாக்கிறான். - என்று ஓர் மேதாவி எழுதுகிறார். டெல்லிப்பட்டணத்தில்
பேண்ட் அணிந்த அத்தனை பேரும் பரமயோக்கியர் என்பது இவரது எண்ணம்.
 கொள்ளைபோன பணத்திலே சரிந்து போன அமெரிக்க அரசையே தூக்கிநிறுத்லாம் - என்கிறார் மற்றொரு அரசியல் விமர்சகர். ஆலமரத்தடியிலே அமர்ந்து கற்பனையில் தயிர் விற்றவனின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
இன்னொரு அறிஞரோ....பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களால் டெல்லிப்பட்ணமே நாற்றமடிக்கிறது. - என்று கட்டுரை எழுதுகிறார். ( நாற்றம் என்ற சொல்லுக்கு மணம் என்றே பொருள் என்று கருதுகிறேன்.)
பதவிப்பேராசையும் அதிகார அத்து மீரல்களும் நிறைந்த எந்தவொரு அரசியல்வாதியின் அந்தரங்கத்தொலைபேசி உரையாடல்கள் எப்போதுமே மணம் பரப்பியதில்லை என்பதை அறிந்திருப்பாரோ என்னவோ.அரசு சலுகைகளை ஒரு சமயத்தில் எதிர்நோக்கிய இந்த மேதாவியின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து கேட்டுருந்தாலும்இப்படியொரு பிரத்தியோகமான துர்நாற்றத்தைதான் நுகர்ந்திருக்க முடியும்.
ஒவ்வொருமுறை மந்திரிசபை ஏற்படும்போதும் அல்லது விரிவாக்கப்படும்போதும் சம்மந்தப்பட்ட தலைகளின் தொலைபேசி உரையாடல்களை தொகுப்போமானால் விதம் விதமான துற்நாற்றங்களை நுகரமுடியும். இதற்கு இந்த நாட்டில் எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல என்பதை உணரவேண்டும்.பெரும்பாலான இலாக்கா நிர்வாக பதவிகளுக்கு கூட இது போன்ற பேரமே நிகழ்கிறது.
கலைஞரின் வயோதிகம் இத்தகய கூச்சலுக்கு இடமளித்துவிட்டது துரதிஷ்டமானதுதான். கலைஞரின் வாரிசுகளே தமிழகத்தின் தனிப்பெரும் தலமைக்கு தீராத அவப் பெயரை தேடித்தந்திருக்கிறார்கள். கலைஞரின் அடிப்படை வரலாற்றை ஒவ்வொருவரும் ஊன்றி படித்திருப்பார்களேயானால் இப்படியொரு இழுக்கு ஏற்பட இடமளித்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இன்றைய பணமும் பதவியும் கலைஞரின் உழைப்பையும் திறனையும் மறைத்திருக்கிறது.
கறைபடிந்த கரங்களையும் பதவிப் பித்தர்களையும் உதறித்தள்ளி தி மு க தன் பயணத்தை தொடரவேண்டும்.
தந்தை பெரியார் வழியில் அண்ணா துவக்கிய இயக்கம் தமிழ் மண்ணுக்குத்தேவை.
 இது போன்ற தருணங்களில் கலைஞர் ஜாதிய ஆயுதத்தை கையில் எடுக்கிறார் என்ற குரல் கேட்கிறது.
திரும்பிப்பாற்கிறேன். அணிவகுத்து கூச்சல் எழுப்பும் வரிசையில்...
தினமணி - விகடன் - கல்கி இதழ்கள் -- அரசியல் நோக்கராக பேசப்படும் துக்ளக் சோ -- ஊடகங்களில் உளரும் ஞாநி.
முன் நிலையில் இவர்களைக்காண நேருகிறது

-------------------------------------------------------------------
இடுகை 0033
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழியிடுங்கள் (comment )

Labels: , ,