Monday 9 January 2012

இந்த வலைப்பூக்கள் இன்னும் முழுமையடையாதவை.அருள் கூர்ந்து வேர்கள் வலைப்பூவுக்கு வருகை தாருங்கள் !
பாண்டியன்ஜி http://verhal.blogspot.com

Friday 8 July 2011

நிழலும் நிஜமும்!
இந்த முறை 34 நாலாவது சென்னை புத்தக சந்தையில் இடம் பிடித்திருந்த புதிய புத்தகங்களில் பெருமளவில்
முன் நின்றது மொழி பெயர்ப்பு புத்தகங்களே.இந்த மிகுதியான எண்ணிக்கை மகிழ்வுக்குறியதே என்றாலும் புதிய படைப்பூக்கத்தில் ஒருபின்னடைவு ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
இது மாதிரியான மொழி பெயர்ப்பு நுல்களைப்பற்றி நெடு நாட்களாகவே எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. துவக்க காலங்களில் நான் வாசிக்க நேர்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூல நூல்களில் இருந்து நேரடியாக தமிழுக்கு வந்தவையாகவே இருந்தது.அவை பெரும்பாலும் நம்மைச் சுற்றி சூழ்ந்திருந்த இந்தி வங்காளம் கன்னடம் மலையாளம் போன்ற இந்திய மொழிகளிலிருந்தே வந்தவை.உலகிலேயே முதன் முதலாக ஆங்கிலத்தில் இருந்தே மொழிமாற்றம் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் பின்னாளில்தான் ஆங்கிலம் வழியாக வந்த நூல்கள் என் கண்களில் பட்டது. அவை பொரும்பாலும் கிருத்துவ மதம் சார்ந்த எழுத்துக்களாகவே இருந்திருக்கின்றன. அதன் ஆசிரியர்கள் பெரும்பாலும் தாய் மொழியிலும் மூல மொழியிலும் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதற்கு போதுமான முயற்சிகள் மேற் கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.அதன் காரணமாகவே மூல நூலிலிருந்த உயிரோட்டம் சிறிதும் சிதைக்கப்படாமல் தமிழுக்கு கிடைத்து என்று சொல்லலாம்.அதே சமயம் நேர்மைத்திறத்தோடு முகப்பில் மூல ஆசிரியனுக்கு முக்கிய இடத்தையும் தங்களுக்குறிய இடத்தையும் ஏற்படுத்திக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.அன்றையதினம் என்னுடைய வாசிப்பை கருத்தில் கொண்டு பார்க்குபோது தேசப்பிதா காந்தியின் சத்திய சோதனையும் ராபின்சன் குருசோவின் பயண அனுபவங்களும் இன்னும் நினைவில் நிற்பவை. இன்னும் சொல்லப்போனால் இந்தி கன்னட வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நூல்களும் என்
நெஞ்சைத் தொட்டவை.
வெகு நாட்களுக்கு முன்னால் கலைமகள் காரியாலயம் வெளியிட்ட மஞ்சரி மாத இதழ் இப்போது என் நினைவுக்கு வருகிறது.ஒவ்வொரு இதழிலும் பிற மொழிக்கதைகள் சிலவும் ஏதாவது ஒரு நாவலின் சுறுக்கப்பட்ட வடிவத்தையும் தொடர்ந்து பிரசுரித்து மொழிபெயர்ப்பு கலையின் ருசியை காட்டியதை எண்ணிப்பார்க்கிறேன்.சொந்த வீட்டு சாப்பாடு சலித்து போனவர்களுக்கும் பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்க நினைத்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அன்நாளைய மஞ்சரி இருந்தது.இதில் தொடர்ந்து வெளியிடப்பட்ட கதைச்சுறுக்கம் மட்டும் என் மனதை என்னவோ செய்தது. இது குறித்து நூலாசிரியர்களுக்கு கோபம் இருந்ததோ இல்லியோ எனக்கு மிகுதியான வெறுப்பு ஏற்பட்டது.
ஒரு நூலின் சிறப்பே அதன் மெல்லிய மையக்கருத்தை நூலாசிரியன் எப்படி தன் கைவண்ணத்தால் வாசகர்களை கிறங்கச் செய்கிறான் என்பதே.அதனை வடிகட்டி சுறுக்கித்தரும்போது ஆசிரியனின் சிறத்தை வீணடிக்கப்படுகிறது. படைப்பாளியின் உத்தியே பயனற்று போகிறது.என் கண்டனத்தை அப்போதே மஞ்சரியில் பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது.
அதற்கு பின்னால் வந்த காலங்களில் பல்வேறு நாடுகளுடன் கொண்ட நல்லுறவின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட தோழமையில் புகழ் பெற்ற அயல் மொழி நூல்கள் தமிழுக்கு கிடைத்தன.இதில் சோவியத் யூனியனின் பங்கு பற்றி மட்டுமே அப்போது அறிந்திருந்தேன்.அவைகள் அனைத்துமே பெரும்பாலும் இரு தேசமொழிகளில் பயிற்சி மிக்கவர்களாலேயே மொழி மாற்றம் செய்யப்பட்டன.ஆங்கிலம் மட்டுமின்றி ஒரு பிரஞ்சு மொழியிலிருந்தோ ஜப்பானிய மொழியிலிருந்தோ கூட இன்றைய தினம் நேரடியாக வேற்று நூல்களை கொணர கற்றறிந்தவர்கள் நம்மிடையே உண்டு. இருந்தபோதிலும் மற்ற தேச சொத்துக்களை ஆங்கிலம் வழியாக மட்டுமே இன்றைய நிலையில் பெற முடியும் என்ற கூற்றில் எந்த அய்யமும் இல்லை.
இன்று ஒவ்வொரு நூல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு மொழியில் உயர்வாக கருதப்பட்ட ஒரு நூல் பல நிலைகளைக்கடந்து இறுதி கட்டத்தை நெருங்கும்போது இயல்பான சுவையை இழந்து வெற்றுச் சக்கையாகவே வந்து சேருகிறது. ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படத்தின்
நிலையை அது அடைகிறது. தூய்மையான போக்கில் உருவெடுக்கும் கூவம் சென்னை நகரை தாண்டும் போது சாக்கடையாய் முடிவதைப்போல நிலைதான் ஏற்படுகிறது. அதன் விளைவு ஆசியாவிலேயே மிகப்பெரிதாக கருதப்படும் நூலகத்திலும் வெவ்வேறு இடங்களில் காணப்படும் குட்டி நூலகங்களிலும் குப்பைகள் சேரத்துவங்குகின்றன.இவற்றுக்கு வெவ்வேறு மண் வெவ்வேறு கலாச்சாரம் என்ற காரணமாககூட இருக்கக்கூடும்.
உயர்வாகவும் சிறத்தையோடும் செய்யப்பட்ட விருந்து சரிவர பரிமாரப்படாமல் போகும் போது ஏற்படுகிற நிலைதான் இறுதியில் இந்த நூல்களுக்கு கிடைக்கிறது. உலகிலேயே பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வள்ளுவரின் குறளுக்கு நாளுக்கு நாள் விதம் விதமான பொருள் இங்கே பேசுவதை கேட்கலாம்..இதை அன்னிய மொழிக்கு மாற்றம் செய்யும் போது எத்தனை சிறத்தை மேற்கொள்ள வேண்டும்.இது போன்ற மொழி மாற்றங்களில் நா பாவின் நூல்களும் லசரா வின் நூல்களும் எது போன்ற விளைவுகளை சந்தித்திருக்கக்கூடும்.மேலும் இது போன்ற நூல்களில் தங்கள் பெயர்களை முன்னிறுத்தி மூல ஆசிரியனின் பெயரை இருட்டடிப்பு செய்வதைக்கூட கண்டிருக்கிறேன்.பல்வேறு நூல்களிலிருந்து பல்வேறு பகுதிகளை பிய்த்தெடுத்து சம்பந்த மற்ற மூல நூல்களின் பெயரை அடிக்கோடிட்டு புது நூல் படைத்தவர்களை கண்டிருக்கிறேன்.
இதையெல்லாம் பார்க்கும் போது இந்த நூலாசிரியர் எழுதி இந்த மொழியில் இருந்து இந்தந்த மொழிகள் வழியாக தமிழுக்கு வந்தது என்று அச்சிடுவதில் என்ன தவறு.
நிஜத்தின் நிழல் எப்போதுமே வெவ்வேறு அளவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.அதைப் போலவே மொழிபெயர்ப்பு நூல்கள் மூலத்திலிருந்து மாறுபட்ட அளவுகளிலேயே அமைகிறது.




Wednesday 15 June 2011

கலைஞர் எழுப்பிய தலைமைச் செயலகம் 

பாண்டியன்ஜி

மக்கள் விரும்பி ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தேர்தல் முடிவுகள்   தெரியத் தொடங்கிய அடுத்த சில நொடிகளிலேயே   அரங்கேரத் துவங்கிவிட்டன.
வழக்கமாக அரசு அலுவலகங்களில்  புதிதாக பொருப்பேற்க வரும் அரசுஅதிகாரி குறைந்தபட்சம் தம் இருக்கைகளையாவது மாற்றியமைத்து
பழைய அதிகாரியின் அடையாளங்களை அகற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.பெரும்பாலும் இருக்கைகள்தாம் இடம் மாறுமே தவிற செயல்பாடுகள் எதுவும் மாறியதாய் எனக்கு நினைவில்லை.இதற்கெல்லாம் அன்நாளில் பெரிதாக செலவுகள் எதுவும் செய்ததாக தெரியவில்லை.தனிநபர் ஒழுக்கமின்மையும் மிகுந்த துணிவும் கொண்ட ஒருசில அதிகாரிகள் இந்த வகையில் ஏற்படுத்திய விரயங்களை காலப்போக்கில் எவரும் கேட்பதற்கு இயலாமல் போனது.சட்டங்களிலும் விதிகளிலும் ஆங்காங்கே காணப்பட்ட பொந்துகளே இது போன்ற துணிவுகளுக்கு துணையாய் நின்றது.
சாதாரணமாக ஒரு அரசு அதிகாரியின் மனநிலையே அவ்வாறு இருக்கும் போது பத்தாண்டுக்கு பிறகு பெரும்பாடுபட்டு பதவிக்கு வரும் கட்சியின் தலைவி அதே இடத்தில் அதே இருக்கையில் அமர்ந்து மீண்டும் ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுத்திட முடியுமா.
மக்களுக்கேற்பட்ட இழப்புகளைச்சொல்லியே பதவிக்கு வந்தவர்கள்அடுத்த சில நாட்களிலேயே அதற்கிணையான விரயங்களை ஏற்படுத்தி மாற்றங்கள் மக்களுக்கு மட்டும்தான் என்று மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.தாங்கள் எந்த நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை சில நாட்களிலேயே அறிவித்திருக்கிறார்கள்.ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப் பொறுப்புக்கு இடம் மாறும்போதும் சில மெல்லிய மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.ஆட்சியை விட்டு வெளியேறுகிற எந்தகட்சியும் அரசு கஜானவை நிரப்பிவைத்ததாக வரலாறு இல்லை.அந்த வகையில் இப்போது புதிக பொறுப்பேற்ற அரசு தலைமைச்செயலகம் முதல் இந்த மாநிலத்தின் கடைநிலை ஊழியர் வரை மாற்றியமைக்கத் துவங்கிவிட்டது.நூற்றுக்கு மேற்பட்ட அய் எ எஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பந்தாடப்பட்டிருக்கின்றனர்.   இன்னும் கடைகோடியில் உள்ள மின்சார இலாகாவின் ஏரியா வயர்மேனில் இருந்து ஹெல்ப்பர் வரைகூட இட மாறுதலுக்கான முதல்வரின் ஆணைகளை எப்போது வேண்டுமானாலும் எதிர் நோக்கலாம்.
பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டிய ஜனநாயகசூழல்களில் கடைநிலை ஊழியர் மாற்றங்களுக்கு கூட முதல்வரின் ஆணை தேவைப்படுவது துரதிஷ்டம்தான்.
உபயொகித்து உதருதல்!    
பொருந்தாத உடையையும்கடிக்கின்றகாலணியையும் பழுது பார்த்து பயன்படுத்தியது பழையகாலம்.இப்போதெல்லாம் தூக்கி வீசி விட்டு வேறொன்றுக்கு மாறுவதுதான் இன்றைய வாழ்க்கை.இதில் இந்த அரசு மட்டும் விதி விலக்கா என்ன.
ஆனால் ஏற்படுகிற இழப்பு தனிமனிதர் எவருக்குமல்ல , மொத்த சமூகத்துக்குமே என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.முக்கியமாக தலைமைச்செயலக மாற்றத்தையும் சமச்சீர் கல்விக்கேற்பட்ட சாமாதியையும்தான் குறிப்பிடுகிறேன்.
புதிய தலைமைச்செயலகம் இந்த மண்ணுக்கு அர்ப்பணிக்கப் பெற்றபோது விழாவில் கலந்து கொண்ட பிரதம மந்திரி உள்ளிட்ட பல்வேறு மாநில த்தலைவர்கள் தலைமைச்செயலக வளாகத்தை வியந்து பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.வெவ்வேறு மொழிகளில் வெளியான பல்வேறு பத்திரிக்கைகள் புதிய தலைமைச்செயலகத்தின் வெவ்வேறு கோணங்களை அச்சிட்டு அதன் கட்டுமான திறனை புகழ்ந்தது நினைவுக்கு வருகிறது.
உத்திரமேரூர் பகுதிகளில் காணப்பட்ட கலாச்சார அடையாளங்களாக கருதப்படும் மாக்கோலங்களின் வடிவத்திலும் அன்னிய மண்ணின் அதி நுட்பத்திறனிலும் இணைந்து உருவாக்கப்பட்டது புதிய தலைமைச்செயலகம் என்று ஆங்கில இதழ்களில் வரையப்பட்ட கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். முன்னும் பின்னும் அணி அணியாக வந்து வியந்து நின்ற மக்களையும் கண்டிருக்கிறேன்.
அத்தனையும் இன்று மக்கள் தேடிக்கொண்ட மாற்றத்தால்
மறக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர்பெருமக்களால் கோரப்பட்டு நெடிய பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு சென்ற வருடம் துவக்கப்பட்ட சமச்சீர் கல்வி இப்போது இந்தபுதிய அரசின் தெளிவற்ற போக்கினால் திடமற்ற நிலையில் நிற்க நேர்ந்திருக்கிறது.இந்த திட்டம் துவக்கப்பட்ட
நேரத்தில் புத்தகங்களின் நேர்த்தியையும் திட்டத்தின் நோக்கத்தையும் வண்ணமயமாக எழுதிய ஏடுகள் கூட இப்போது வணிககூட்டங்களுக்கு ஆதரவாக பேசுவதை பார்க்கிறேன்.ஜாதிய சங்கங்களும் வணிகக்கூட்டங்களும் இணைந்து எழுப்பிய கோரிக்களை உச்ச நீதிமன்றமே
நிராகரித்தபின்னும் இந்த அரசு சொத்தைக்காரணங்களை பேசி கிடப்பிலே போட்டிருக்கிறது.
முன்னதாக செய்த செலவினங்களை விரையமாக்கி மீண்டும் செலவுகளை செய்ய முடிவு செய்திருக்கிறது.மொத்தத்தில் ஒரு சமதர்ம சமுதாயத்துக்கேற்ற திட்டத்தை சமாதி நிலைக்கே கொண்டு
சென்றிருக்கிறது இந்த அரசு.
மூன்று மணி நேரமே எழுதக்கூடிய பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களைக்கூட பிழையின்றி நம்மால் தயாரிக்க
முடிந்ததில்லை.இருந்தபோதும் திருத்தப்பட்டு சரி செய்யப்படுகிறது.எப்போதுமே அரசின் எந்தவொரு ஆணையும் அடுத்தடுத்து வெளியிடப்படுகிற திருத்தங்கள் எதுவுமின்றி
கலைஞர் எழுப்பிய தலைமைச் செயலகம் 
முழுமையடைந்ததில்லை.சமச்சீர்கல்விப்புத்தகங்களில் ஏற்பட்டிருக்கிற மனிதக்குறைபாடுகளையும்அச்சாக்கும்போது ஏற்பட்டுவிட்ட பிழைகளையும் கூட அடுத்தடுத்த சுற்றறிக்கைகள்மூலம் சரி செய்திட முடியும்.அதைவிடுத்து அறவே அகற்றுவது ஜாதிய வர்கத்தினருக்கு ஏற்படுத்தும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.கட்சிக்காரர்கள் சுரண்டிக் கொழுக்க துணையாயிருக்கும்.
ஊழல் ஒருபக்கம் இந்த நாட்டை உலுக்குகிறது.விரயம் மறுபக்கம்
வேட்டையாடுகிறது.
வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் தாவி ஏறியது !

இடுகை 0061




Tuesday 31 May 2011

கிணற்றுத் தவளைகள் ! ( எழுத்தாளர் ஜெய மோகனுக்கு ஒரு மின்னஞ்சல் )

அன்பார்ந்த ஜெயமோகன்

உங்களைப்பற்றியோ உங்கள் நூல்களைப்பற்றியோ நான் முன்னதாக அறிந்திருக்க வில்லை.நீங்கள் நெடுங்காலமாக எழுதி ஒரு வட்டத்திற்குள் ஒரு இடத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக்கொண்டாலும் நான் சமீபகாலத்தில்தான் உங்கள் எழுத்துக்களை திரும்பிப் பார்க்க நேரிட்டது.உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.வெகுஜன பத்திரிக்கைளை நீங்கள் இடக்கையால் ஒதுக்கி நேரடி பதிப்பை நீங்கள் கையாண்டது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களில் உங்களிலிருந்து நான் வேறு பட்டிருந்தாலும் மொழிசார்ந்த எண்ணங்களில் எவரையும் நேசிப்பவன் .இயல்பாக ஒரு எழுத்தாளனாக உருவெடுக்க எண்ணி அதற்கான முயற்சிகள் எதுவுமின்றி புற காரணங்களால் நான் தோல்வியுற்றவன் என்பதையும் அறிவேன்.
சமீபத்திய நாட்களில் அவ்வப்போது உங்கள் இணையதளத்துக்கு வருவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பத்திரிக்கையாளர் சின்ன குத்தூசி குறித்த உங்கள் பதிவை பார்க்க நேரிட்டது.எழுத்துலகில் இன்னும் எத்தனையோ தூரத்தை கடக்க வேண்டிய (நான் பக்கங்களை சொல்லவில்லை )உங்களுக்கேற்ற பண்பாக தோன்றவில்லை. உங்களுக்கேற்பட்டிருந்த அளவுக்கதிகமான மேதாவித்தனமே இது போன்ற கருத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்று கருதுகறேன்.இந்தமண்ணில் இல்லாமற்போன, தன்பிறந்த சமூகத்துக்கு எதிராக தான் கொண்ட கருத்துக்களில் கடைசிவரையில் வாழ்ந்த மனிதரைப்பற்றி ஒரு சக வணிக எழுத்தாளன் (காசுக்காக எழுதும் எவரும் என்னைப்பொறுத்தவரை ஒரு வணிக எழுத்தாளன்தான்.) இப்படியும் எழுத முடியுமா.முதல் பகுதியில் அவர் யாரென்று நான் அறியேன் என்று துவங்கிய நீங்கள் அடுத்த சில வரிகளில் உங்களுக்கு அவர்மீது காழ்ப்பு வரநேர்ந்த காரணத்தை தந்திருக்கிறீர்கள். அதற்காக யாரோ ஒரு வாசகர் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ ஒரு களனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.நான் இப்படி பேசுவதற்கு காரணமும் உண்டு. சமீபத்தில் நான் காண நேர்ந்த ஒரு சில குறுகிய வட்ட எழுத்தாளர்களின் இணையதளங்கள் இந்த யுத்தியையே கடைபிடிப்பதைக்கண்டிருக்கிறேன்.வாசககர் எழுதும் கடிதமும் அதற்கு தரப்படும் பதிலும் ஒன்றுபோல நடைபயிலுவதைக்கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.

சின்னகுத்தூசி எளியதமிழில் அத்தனை பிரதேசமக்களும் ( குப்பத்து வழக்கல்ல )அறியும் வகையில் தான் ஏற்ற பகுத்தறிவு
சிந்தனைகளுக்கும் தான் சார்ந்த திராவிட இயக்கங்களுக்கும் வடிவம் கொடுத்தவர்.சந்தைகளில் ஜாலம் காட்டும் விருதுகளுக்காகவோ வயிற்றை நிரப்ப தேவைப்படும் சன்மானங்களுக்காகவோ குறுகியவட்ட துதிகளுக்காகவோ கிணற்று தவளைகள் போல் அவர் என்றும் செயல்பட்டதில்லை.
அவரை ஒரு வணிககட்சியின் எழுத்தாளர் என்று எழுதியிருக்கறீர்கள்.அப்படியென்றால் வாழ்வில் அங்கீகாரமற்ற அவலங்களை மேலும் வேர்விடாமல் நிராகரிக்கப்படவேண்டிய நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக்காட்டிஅதுதான் இலக்கியமென்று எழுதுபவர் அத்தனைபேரும் இனாமாக எழுதுகிறார்களா.
ஒரு சமயம் விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர் சார்ந்த ஒருவிவாதத்தில் பங்கேற்ற தாங்கள் தனிமனிதனாக துணிந்து பேசிய கருத்துக்கள் என் நினைவில் தங்களுக்கு ஒரு இடம் ஏற்படுத்தியது.அதற்குள்ளாகவே தாங்கள் எழுதிய அடுத்த கட்டுரையொன்றில் சுந்தரம் ராமசாமியை மேற்கோள் காட்டி பெரும்பாலும் தர்கத்திலிருந்து விலகி பிரச்சனைகளைத் தவிற்பதே நல்லது என்ற அறிவுரையையும் தந்து நான் அப்படித்தான் என்றும் அடித்து பேசியிருந்தீர்கள்.ஆனால் அடுத்தடுத்து உங்கள எழுத்துக்களில் தனி மனிதர் சார்ந்த நக்கல்கள் குறைந்தபாடில்லை.ஏன் இந்த தடுமாற்றம்.
நீங்கள் பேசுவதைப்போல இப்போதெல்லாம் நீங்கள் சுவர்களில் எழுதினால் கூட அடுத்த மாதங்களில் அச்சிட்டு வெளியிட ஆயிரம் பதிப்பகங்கள் காத்திருக்கிலாம்.அதை வாசிப்பதற்கு ஒரு 500 பேர் இருந்தால் போதுமென்று நினைக்கிறீர்களா.அவை ஜனத்திரளிடம் சென்றடைய வேண்டாமா.அதுபோன்ற கட்டுரைகளில்கூட நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிற தனி நபர் நக்கல்கள் பலர் முகம் சுளிக்க காரணமானதை உணர்ந்திருக்கிறீர்களா.சாதாரண திண்டுக்கல் லியோனியும் அசாதாரண வைரமுத்து ஜேசுதாசும் கூட உங்கள் இலக்கியங்களில் இடக்கையாலோ உலக்கையாலோ இகழப்பட்டிருப்பதை பார்க்கிறேன்.இந்த தனிமனிதர் இகழ்ச்சி உங்கள் நூல்களிலும் இடம் பெறவேண்டுமா. உங்கள் எழுத்து இலக்கியமா அல்லவா என்பதை நீங்களே நிச்சியிக்க முடியும் என்று கருதுகிறீர்களா.தகுதி வாய்ந்த இலக்கிய திறனாய்வாளர்கள்இப்போது தமிழில் இல்லை.அதனாலேயேதான் தாம் எழுதிய எழுத்துக்கள்தாம் இலக்கியங்கள் என்று பறைசாற்றி கொள்வதும் மற்ற எழுத்துக்கள்திறனற்றவை என்று குரலெழுப்புவதையும் எளிதாக காணமுடிகிறது.
மக்கள் மொழியில் எழுதிய ஜெயகாந்தனையோ இலக்கிய தமிழில் எழுதிய நா பா வையோ இன்னும் எவரும் எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.சமீப காலத்தில் தமிழுக்கு நவீன தடத்தை சுட்டிக்காட்டி எழுத்துலகில் திருப்பங்களை ஏற்படுத்திய சுஜாதாவையே இன்னும் இந்த இலக்கிய உலகம் அங்கீகரிக்க வில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
அடுத்தவர் எழுத்துக்களை இகழ்வதை விடுத்து தன் எழுத்துக்களில் கவனம் சேர்த்தால் விருதுகள் தானே தேடி வரும்.அதுவன்றி விருதுகளை எண்ணி நாவில் நீர் வடிய பேசுபவர்களைத் தேடி எந்த விருதும் வந்ததில்லை என்பதுதான் உண்மை.
சென்னையிலிருந்து ... பாண்டியன்ஜி.
இடுகை 0060

Thursday 26 May 2011

நமது குழந்தைகளின் மூ வேற்று மொழி மூலம் பயில்வதால் அயர்ச்சியுற்று விட்டது. மனப்பாடம் செயவதால் சுயசிந்தனை மங்கிவிட்டது. நமது நாட்டிலேயே ஓர் அந்நிய இனத்தவராக நம் குழந்தைகளை இவ்வேற்று மொழிப்பயிற்சி மாற்றி விட்டது. நமது மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்து விட்டது.
எனக்கு அதிகாரம் இருக்குமானால் இன்றே இவ்வேற்று மொழிப்பயிர்ச்சியை நிருத்தி மாற்றம் காண்பேன். பாட நூல்கள் வரும்வரை காத்திருக்கமாட்டேன்.மீற்றம் ஏற்பட்டால் தானாக வரும்.இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய தீமை.
மகாத்மா காந்தி

சின்னகுத்தூசி என்ற ஆயுதம்.



பாண்டியன்ஜி
15 06 1934   -   22  05  2011
சின்னகுத்தூசியார் என்று பத்திரிக்கையாளர்களால் பெரிதும் போற்றப்பட்ட திரு இரா தியாகராஜன் இந்த மாதம்    22 ஆம் தேதி சென்னையில் இயற்கைஎய்தினார்.அவருக்கு வயது எழுபத்தேழு. தன் எழுத்துக்களைத் தவிற அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை.
திருவாரூரில்1934 ல் பிறந்த தியாகராஜன் பிறப்பிலே பிராமண சமூகத்தைச் சார்ந்திருந்தாலும் பள்ளிநாட்களிலேயே பகுத்தறிவு சிந்தனைகளிலும் திராவிட இயக்கத்திலேயும் தீராத ஈடுபாடு கொண்டவர்.அடிப்படை கல்விக்குப் பிறகு
திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிர்ச்சி கல்லூரியில் பயின்ற தியாகராஜன் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியவர்.இறுதியாக காரைக்குடி அருகிலிருந்த குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் பொருப்பிலிருந்த பள்ளியொன்றில் பணியாற்றியபோதுதான் அவர் வாழ்வில் அந்த திருப்பம் நிகழ்ந்தது.
அப்போது திமுக வின் நிரந்தர பாராளமன்ற உருபினராக செயல்பட்டவர் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட ஈ வெ கி சம்பத் அவர்கள்.அன்று திமுக செய்த தவறு தொடர்ந்து ஒருவரை தங்கள் சூழல்களை விட்டு விலகி டெல்லிப்பட்டணத்தில் குடியமர்த்தியதுதான்.அதன் பலனை திமுக அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்த காலம் .திராவிட பாரம்பரியத்தில் தோன்றிய சம்பத் டெல்லிபட்டணத்தில் காங்கிரஸுடன் குலவி திமுக வை விட்டு நகர முயன்ற போது அண்ணா சிந்திய கண்ணீர் வீணாயிற்று.சம்பத்தின்
தமிழ் தேசிய கட்சி புதிதாக உருவெடுத்தபோது திமுக வில் கலைஞரின் எழுச்சியில் அழுக்காறுற்ற ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள்(கவிஞர் கண்ணதாசன் உட்பட ) சம்பத்தை பின் தொடர்ந்தனர்.
அப்போது
முன்னதாகவே அறிந்திருந்த தியாக ராஜனின் துணை சம்பத்துக்கு தேவைப்பட்டது. இனிய தமிழில் சொல்ல வந்த கருத்துக்களை தக்க சான்றுடன் நிருவத் தெரிந்த தியாக ராஜனும் ஆசிரியர் பணியை உதறி அரசியலுக்குள் நுழைந்தார்.
அறுபதுகளில் நான் பயின்ற அரசு மேல் நிலைப்பள்ளியில் சில காலம் தலைமை ஆசிரியராக பணி செய்த எழுத்தாளர் பி சி கணேசன் சம்பத்தின் தமிழ்தேசிய கட்சியில் இணைந்தார். அப்போது திருவாரூரில் அவர் துவக்கிய மாதவி என்ற இதழுக்கு தியாகராஜன் ஆசிரியரானார்.
திராவிட சிந்தனைகளிலிருந்து வெகுதூரம் விலகிப்போன சம்பத் புதிய இயக்கத்தை செழிப்புர கட்டிக்காத்திட போதுமான திறனின்றி ஒரு கட்டத்தில் காதல் கொண்ட காங்கிரஸியக்கத்தில் கலந்து போனார்.இன்று அவரின் வித்து தந்தை பெரியாரின் பேரன் காங்கிரசில் முளைத்திருப்பதற்கான காரணமும் அதுதான்.
சம்பத்தின் முடிவை ஏற்க மனங்கொள்ளாத தியாகராஜன் திமுக வில் கலைஞருக்குத் துணையானார்.ஏறதாழ அறுபது வருட திராவிட இயக்க வரலாற்றை அணு அணுவாக அறிந்திருந்த தியாகராஜன் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக கலைஞரின் அரசியல் ஆயுதமாக திகழ்ந்தவர்.தமிழ் தேசிய கட்சியின் தமிழ் செய்தி, மாதவி இதழ்களைத் தொடர்ந்து நவசக்தி,நாத்திகம்,அலை ஓசை ,முரசொலி , எதிரொலி போன்ற இதழ்களிலும் முக்கிய பொறுப்பிலிருந்தவர்.அவ்வப்போது குமுதம் ,ஜூனியர் விகடன் ,நக்கீரன் இதழ்களிலும் தொடர் விமர்சனங்கள் எழுதியவர்.
கொக்கிரகுளம் சுல்த்தான் முகமது ,ஆர் .ஏ மஜாட்டோ ,திட்டக்குடி அனீப் போன்ற பல் வேறு வினோதமான பெயர்களில் கட்டுரைகள் எழுதினாலும் அவர் கட்டுரைகளை கூர்ந்து கவனித்தால் அவர் இலக்கு ஒன்றாகவே இருப்பதை உணரக்கூடும்.
திராவிட கழகத்தில் தந்தை பெரியாருக்கு துணையாயிருந்த பழம்பெரும் தலைவர் குருசாமி குத்தூசி என்ற ஒரு இதழை நடத்திய நேரம். குருசாமியின் எழுத்தில் ஈர்க்கப்பட்ட  தியாகராஜன் சின்னகுத்தூசியானார்.
அக்ராகாரத்து அதிசயம் என்று பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட எழுத்தாளர்    வ ரா வுக்குப்பிறகு கலைஞரால் போற்றப்பட்ட அதிசயம் சின்ன குத்துசியார்.
திராவிட இயக்கத்தின் அறுபது ஆண்டு கால நிகழ்வுகளை தன் விரல்நுனியில் வைத்திருந்த சின்ன குத்தூசியார் எழுத்துக்கு இடையூராக உறவுகளையோ வாரிசுகளையோ எதனையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆமாம் அவர் இறுதிவரை திருமணம் எதனையும் செய்து கொள்ளாமல் தன்னந்தனியனாகவே வாழ்ந்தார்.இப்போது அவர் நடந்து வந்த காலடிச்சுவடுகள் மட்டுமே விஞ்சியிருக்கிறது.இந்த சட்டமன்ற தேர்தல்களில்
கலைஞரின் இரங்கல் !
மாற்றங்கள் வேண்டி தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு கலைஞருக்கோ அவர்தம் கழகத்துக்கோ ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பல்ல.சின்னகுத்தூசியாரின் இழப்பே பேரிழப்பு.

கையில் ஒளிக்கீற்றுடன் திராவிட இயக்கங்களுக்கு துணையாக தன்னந்தனியனாக பயணம் செய்த சின்ன குத்தூசியாருக்கு அவரது இறுதி காலத்தில் ஒரு தனயனைப்  போல காத்து நின்ற நக்கீரன் கோபாலின் செயல்     நெஞ்சை     நெகிழவைக்கிறது.   அவரது பணியே சின்னகுத்தூசியாரின்      வரலாற்றின்    முடிவுரையாக       இருக்கும்.

இடுகை 0059
எல்லா விஷயங்கள் பற்றியும் விமர்சிக்கிறீர்கள். ஆனால் தி.க. - தி.மு.க. சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் மவுனம் சாதிக்கிறீர்களே; இது எப்படி சரியாகும்?
தி.க., தி.மு.க. ஆகிய இரு இயக்கங்கள் பற்றியும் ஓச்சல், ஒழிச்சல் இல்லாமல் கேலி செய்ய, கண்டிக்க, தாக்கிட என்று எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ எழுத்தாளர் பெரு மக்களும் இருக்கிறார்கள்.ஓரிரு சந்தர்ப்பங்களில் தி.க.வும், தி.மு.க.வுமே ஒன்றையொன்று தாக்கி விமர்சனப் போர் நடத்து கின்றன. என்னைப் பொறுத்தவரையில் தி.க. - தி.மு.க., ஆகிய இரு அமைப்புகள் பற்றியும் எத்தனைப் பேர் எத்தனைவிதமான குறைகளைக் கூறினாலும், அந்த இரு அமைப்புகள் இருக்கும் வரையில்தான் சமூக சீர்திருத் தத்துக்கான காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். அந்த இரு அமைப்புகளும் இல்லாவிட்டால் இங்கே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்றவைகளை இந்த அளவுக்கு அழுத்தமாக வலியுறுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய அமைப்புகள் வேறு எதுவும் என் கண்ணுக்குப்படவில்லை. ஆகவே தி.க., தி.மு.க., வன்முறைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்து, அவைகளை அழித்துவிடத் துடிக்கும் பேனா வீரர்கள் அணியில் இடம் பெற நான் விரும்பவில்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் நான் தயாராகவில்லை
காலச்சுவடு இதழில் சின்னகுத்தூசி

Wednesday 25 May 2011



மூலகதையை இங்கே படிக்கலாம்

அழகர்சாமியின் குதிரை !
பாஸ்கர் சக்தி

கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக,அதே ஊரில் வேலை பார்க்கும் காளமேக வாத்தியார் முப்பது வருடங்களாகச் சொல்லி வருகிறார். ஆனால் அவர் மட்டும் மாறுவதாக இல்லை!

வேட்டி நுனியை இடக்கையால் தூக்கிப் பிடித்தபடி மூக்குப்பொடியும், ஹவாய்
செருப்புமாக ஊருக்குள் திரிகிறார். காலம் அவர் தலைமுடியை மாற்றும் முயற்சியில்
இறங்கிவிட்டது. காளமேகம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தன் பெயருக்கேற்ப தலையும்
கருமேகம் போல் இருக்க வேண்டுமென்று மாதம் பிறந்தால் பக்கத்து டவுனுக்கு
மொபெட்டில் போய் முடிவெட்டி, டை அடித்துத் திரும்பி வருகிறார்.
தாமரைக்குளம் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் தொண்ணூற்று ஒன்பது சதவிகித கிராமங்கள்
காளமேக வாத்தியாரின் மண்டை மாதிரிதான், தங்கள் ஒரிஜினல் நிறத்தை இழந்து
வெளிறிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை இயல்புப்படி மாறவிடாமல், முடிந்தவரை சாயம்
பூசிப் பூசிப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், மாற்றமோ அவ்வப்போது
வெளிவந்து கண்ணாமூச்சி காட்டுகிறது.
தாமரைக்குளத்தின் மையம் ஆலமரத்தடிதான். அழகர்சாமி கோயிலை அடுத்து வளர்ந்திருந்த
ஆலமரத்தை அணைத்தாற்போல் ஒரு மண்டபம் கட்டி, பிள்ளையாரைக் காவலுக்கு
வைத்திருந்தார்கள். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட மண்டபம். தாங்கி நிற்கிற கல்தூண்கள்,
சிவப்புக் காவி பரவிய ஜில்லிடும் தரை.
அதில் நிரந்தரமாக கிடந்த கோலம், சாய்ந்த கோலம், கவிழ்ந்த கோலம் என ஆறேழு
கோலங்களில் ஏழெட்டுப் பேர் அலங்கோலமாகக் கிடப்பார்கள். பெரும்பாலும் ஐம்பதைத்
தாண்டிய கிராமத்தின் சீனியர் சிட்டிசன்கள். ஊரு தலைப்பிரட்டுப் பயல்களுக்கு
பெருசுகள். மரியாதையாகச் சொல்வதானால் வயசாளிகள். அனுபவஸ்தர்கள்.
பிள்ளையார்தான் பாவம்… இந்த வயசாளிகளின் புலம்பல்களையும், வெற்றிலை எச்சில்
துப்பல்களையும், புகையிலைப் பெருமூச்சையும், விவஸ்தையின்றி அவர்கள் பேசும்
கெட்ட வார்த்தைகளையும் பெரிய காதுகளால் கேட்டபடி நொந்து போயிருக்கிறார்.
பிள்ளையாருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் போல அழகர்சாமி. அவருக்குச் சின்னதாகக்
கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் மாதிரி முடங்கிக் கிடக்கிற
அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஐம்பொன்னால் ஆனவர். எனவே ஊர்ப் பெரியகுடியின்
வீட்டு சாமி ரூமில் இருக்கிறார்.
அவரது வாகனமான குதிரை, ஐந்தாறு கிலோமீட்டர் தாண்டி, மலையடிவார மண்டபம் ஒன்றில்
ஏகாந்தமாக இருக்கிறது. சித்திரை மாதத் திருவிழாவுக்கு அழகர்சாமி ஊர்வலமாக
மலையடிவாரம் போய் தனது வாகனத்தில் ஏறி, மலையடிவாரம் தாண்டிய ஒரு காட்டாற்று
மணலில் இறங்கி அருள்வார்.
பிறகு ஊர்வலமாக வந்து, கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூன்று நாட்கள் கோலாகலத் திருவிழா. முதல் நாள் கரகாட்டம், மறுநாள் சமூக -
சரித்திர நாடகம், மூன்றாம் நாள் பாட்டுக் கச்சேரி.
கேளிக்கைகள் குறைவாக இருந்த கிராமங்களில் திருவிழாக்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. கடவுளருக்கு மகிழ்வு தந்து மக்களுக்கு மழை தருபவை.
ஆலமரத்தடி மண்டபத்தில் காளமேக வாத்தியாரது மொபெட் வந்து நின்றபோது, வரப்போகும்
திருவிழா பற்றி மூன்று பேர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க?”
“திருனா நெருங்குதில்ல வாத்யாரே.. இந்த வருசம் எந்த நாடகம் போடறதுன்னுதான்!”
வாத்தியார் சுவாரஸ்யமின்றி, “என்னமோ அம்பது நாடகம் கைல இருக்கிற மாதிரிதான்.
வள்ளித்திருமணம், வீரபாண்டியக் கட்ட பொம்மன், கதம்ப காமிக்… இந்த மூணைத்தான்
திரும்பத் திரும்பப் போடறோம். அழகர்சாமிக்கே ‘போர்’ அடிச்சுப் போயிருக்கும்!”
பேசிக்கொண்டு இருந்த மூவரில் ஒருவர் காரை வீட்டுப் பெருமாள். மற்றவர்,
சின்னச்சாமி. இன்னொருவர் கோவிந்தசாமி. மூவரும் வாத்தியாரை எரிச்சலுடன்
பார்த்தார்கள்.
“ஏன் வாத்யாரே! நீயும் வருசா வருசம் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச்
சொல்லித் தாற! நீ சம்பளம் வாங்கலையா? ஏன்யா இப்படிக் கூறு கெட்டவன் மாதிரி
பேசற…? நீ எல்லாஞ் சொல்லிக் குத்து, இந்தூர்ப் புள்ளைக கரை சேரவா?” என்றார்
கோவிந்தசாமி.
“நான் கிளம்பறேன்!” என்றார் வாத்தியார்.
“அட என்னய்யா… வந்த கையோட போறேங்கறே? கோவிச்சுக்கிட்டியா?”
”அதில்ல.. வேலை கிடக்கு!”
“அடேயப்பா.. எங்களுக்குத் தெரியாம, உனக்கு அப்படி என்னய்யா வேலை? ஊர்லயே
ராசாகணக்கா இருக்கிறது நீதான்யா! மாசமானா கவுர்மென்டு சம்பளம். நிழல்ல
உக்கார்ந்திருந்து வாழ்ற! இதுல, வருசத்துல முக்காவாசி நாளு லீவு!”
அடிக்கடி இவ்வாறான பொறாமைக் குரலை கோவிந்தசாமி வெளிப்படுத்துவார். அவருக்கு
வாத்தியார் மீது லேசானதொரு விரோதம் உண்டு. அவர் வாத்தியார் வேலைக்குப் படிக்கப்
போய், அது பிடிக்காமல் ஓடிவந்து, ஊரில் விவசாயம் பார்த்தவராம். தான் இழந்த
வாய்ப்பைக் கண் முன்னே அனுபவிக்கிற ஜீவனான காளமேகத்தை சமயம்
கிடைக்கும்போதெல்லாம் இடித்துப் பார்ப்பார்.
வாத்தியார், இந்தப் பாமரர்களை ஒரு பார்வை பார்த்தார். அறிவாயுதம் கொண்டு
அவர்களை வீழ்த்த எண்ணி, “வீட்டுக்குப் போனா நாலஞ்சு புக்ஸைப் படிக்கலாம்.
பசங்களுக்குச் சொல்லித் தர்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். இங்க உக்காந்து
வெட்டிக் கதை பேசறதுல என்ன பிரயோஜனம்?”
“வாத்தியார் பேச்சைப் பார்த்தியா? வருசம் பூரா இங்கன உக்காந்து, எங்ககூட
வெட்டுப் புலி, தாயம் ஆடிட்டு, இப்ப திடுதிப்புன்னு மாத்திப் பேசறியே
வாத்தியாரே… புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற ஆளு.. பேச்சு சுத்தம்
வாணாமா?”
இன்றைக்குத் தனக்கு நேரம் சரியில்லை என்ற முடிவுக்கு காளமேகம்
வரவேண்டியதாயிற்று. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்தார்.
”ம்…! சம்சாரிக எல்லாம் இன்னிக்கு ஒரு விதமாகத்தான் பேசறீங்க. படிப்பு
சொல்லிக் குடுக்கறவன் சாமி மாதிரி! அவனை மதிச்சுப் பழகணும். நீங்க பேசறதே இந்த
லட்சணத்துல இருந்தா, நாலைக்கு உங்க புள்ளைங்க வாத்யாரை மதிக்குமா? கலிகாலம்
வந்துருச்சு. மழை பெய்ய மாட்டேங்குதுன்னா, ஏன்? அம்புட்டுப் பேரும் இப்படிக்
குணங்கெட்டு அலையிறதாலதான்!”
மூவரும் வாயடைத்தனர். என்ன இருந்தாலும் படித்தவனின் திறமையே திறமை என்று
காளமேகம் தன்னை மெச்சிக் கொண்டார்.
அவர்களை அவர்களது ரூட்டிலேயே மடக்கியாயிற்று. (மூன்று பேரும் கலி முத்திப்போனது
பற்றியும் மழை பொய்ப்பது பற்றியுமே தினமும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.)
“சரியாச் சொன்னீங்க வாத்யாரே!” அவர் முகத்தில் வருத்தம்.
இரண்டு வருடங்களாக ஊரில் மழை சரியில்லை. இயற்கைக்கு வஞ்சகம், சூது எல்லாம்
இத்தனை வருசமாகக் கிடையாது. அது அப்பாவியாக இருந்தது. இப்போது அதுவும் மனுசனைப்
போல் மாறிவிட்டதோ?
பெருமாளின் நெடிய அனுபவத்தில், ஆடி மாதமானால் மழை தேடிவரும். ஓடைகளில் தண்ணீர்
கரை தொட்டுப் போகும். ஊரைச் சுற்றியிருக்கும் எட்டுக் கண்மாய்களிலும் நீர்
நிறையும். பருத்தியும், நெல்லும், கரும்பும் மோட்டார் வைத்து ஒருபுறம் விவசாயம்
செய்யும் அதே நேரம், காட்டு வெள்ளாமையாக சோளமும், மொச்சையும், எள்ளும்,
கடலையும், தட்டாம்பயிறுமாக.. ஊரில் யாரும் எதற்கு ஏமாந்து நின்றது கிடையாது.
தாகம் எடுத்தால், எந்த வீட்டு வாசலிலும் நின்று மோர் கேட்டு வாங்கிக்
குடிக்கலாம். அது ஒரு காலம். இப்போது அப்படியா இருக்கிறது?
ஊரில் எல்லார் வீட்டிலும், பாலை சொஸைட்டிக்காரனுக்கு விற்கிறார்கள். காலை
நேரத்தில் சைக்கிளில் வந்து, கேன்களில் பீய்ச்சிக்கொண்டு போய்விடுகிறான்.
’மனுசப்பய சனம் எல்லாத்தையும் காசை வெட்டுக் கணக்குப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு!’
என்று தனக்குள் எண்ணிக்கொண்ட பெருமாள், அழகர்சாமியின் கோயிலைப் பார்த்து
வணங்கினார். அவருக்கும் வயது அறுபதாச்சு. ஒவ்வொரு சித்திரை பவுர்ணமியிலும்
அழகர் ஆற்றில் இறங்குவதும், அந்த மூன்று நாட்களுக்குள் மழை பெய்வதும் தப்பாமல்
நடந்து வருகிறது. போன வருசம் அப்படி நடக்கவில்லை. சாமி கோயிலில் இருந்த போதும்
கூட மழை பெய்யவில்லை. கோயில் மறுநுழைவு எல்லாம் முடிந்து, சாமி திரும்பிப் போன
பிறகுதான் கொஞ்சம் மழை பெய்தது.
“என்ன பெருமாளு, பலமான யோசனை?” என்றார் கோவிந்தசாமி.
“இந்த வருசம் அழகர் ஆத்துல இறங்கும்போது, கண்டிப்பா மழை பெய்யணும்டா கோயிந்து.
நான் மனசுல நினைச்சு வச்சிருக்கேன்!”
“அண்ணே, அதுக்கு நீ நினைச்சாப் பத்தாது. அழகர்சாமியில்ல மனசு வைக்கணும்..!”
”இந்த எகடாசிப் பேச்செல்லாம் வேணாம். போன தடவை மழை பெய்யலன்னதும், நாங்க
கமிட்டி கூடிப் பேசி சாமிகிட்ட குறி கேட்டோம். ‘வர்ற வருசம் திருவிழாவைச் சுத்த
பத்தமா, விமரிசையா பண்ணனும்’னு வாக்கு வந்துச்சு. ‘குதிரையைச் செப்பனிடணும்.
வரி வசூலைக் கூட்டிப் போட்டு, ஜாம் ஜாம்னு கொண்டாடணும்’னு முடிவு
பண்ணியிருக்கோம்!”
”அப்படியே…  வருசா வருசம் கூட்டிட்டு வர்ற அந்த கரகாட்டக்காரியையும், வள்ளித்
திருமணம் நாடகசெட்டையும் மாத்திருங்க. போன வருசம் வந்திருந்த முருகனுக்கு வயது
அம்பத்தஞ்சு. வள்ளிக்கு நாப்பத்தேழு!” என்றார் வாத்தியார்.
“ப்ச்…! நக்கல் பண்ணாத வாத்யாரே… எனக்கு சமயத்துல எம்புட்டுச் சங்கடமா
இருக்கு, தெரியுமா? இப்புடியே போயிட்டு இருந்தா, ஊரு என்னத்துக்கு ஆகும்?
தோட்டத்துல தண்ணி சுத்தமா கீழ போயிருச்சு!”
வாத்தியாருக்கும் அது தெரியும். பருவநிலைகள் மாறித்தான் வருகின்றன.
புதுசுபுதுசாகக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒருமுறை டவுனில் ஒரு வேன் வைத்து,
மழை பெய்யாததற்குக் காரணம் மரங்களை வெட்டுவதுதான்’ என்று சொன்னார்கள். அதை
வந்து இங்கே சரியாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. இவர்களிடம் கேலிப் பேச்சு
வாங்கியதுதான் மிச்சம்.
இவர்கள் பேச்சு தொடர்கையில் பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் தன் கூட்டாளி
கனகுவோடு வந்தான். இரண்டு பயல்களும் பெருசுகளை சட்டை பண்ணாமல் வந்து
மண்டபத்தின் வயர், சுவிட்சுபோர்டு மீட்டர்களைப் பார்வையிட்டனர்.
”ஏய்… இத்தினி பெரிய மனுசங்க இருக்கோம்… செருப்புக்காலோட அங்கியும்
இங்கியும் போறியா?”
“மன்னிச்சுக்குங்க நைனா!” என்று செருப்பை அவிழ்த்தான் கனகு.
“என்னடா பண்ணப் போறீங்க?”
“நாளைக்கு இங்கன ஒரு நாடகம் போடலாமின்னு இருக்கோம்!”
பெரியவர்கள் முகம் கறுத்தது. பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் இரணியனுக்குப்
பிறந்த பிரகலாதன் மாதிரி… ஆனால், நேர் எதிர்! கருடனைக் கண்டால் விரட்டி
விரட்டிக் கும்பிடுகிறவர் பெருமாள். சாமியே கும்பிடாத தறுதலைப் பயல்
ராமகிருஷ்ணன். கூடச் சேர்ந்திருக்கிற கனகு பற்றிப் பேசவே வேண்டாம். சரியான
அரைக் கிறுக்கன். ரெண்டு பயல்களும் இப்போதுதான் காலேஜ் முடித்து கைலி கட்டி,
ஊருக்குள் வெட்டிப் பொழுது ஓட்டித் திரிகிறார்கள்.
“ஏண்டா… போன தடவை நாடகம் போடுறோம்னு சொல்லி எங்களை எல்லாம் நக்கல் பண்ணீங்க.
இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறீங்களா? உதை வேணுமா ரெண்டு பேருக்கும்?”
”இல்ல பெரியப்பா… இது விஞ்ஞான விளக்க நாடகம்!”
“அடேங்கப்பா… எங்களுக்குத் தெரியாம என்னடா விளக்கம்?”
”பூமி எப்படி உருவாச்சுன்னு கதையும் பாட்டுமா சொல்லப் போறோம்!”
சின்னச்சாமி மெதுவாகக் கண்காட்டினார். கோவிந்தசாமி காதைக் கடித்தார்.
வாத்தியாரையும் கூப்பிட்டார். “இந்தப் பயலுக சிக்கல் புடிச்சவனுக. எதையாவது
சின்னப் புள்ளைத்தனமா இழுத்து விவகாரமாச்சுன்னா வம்பு. பெருமாள்கிட்ட சொல்லிப்
பயலைத் தட்டி வைக்கணும்!”
“அதாஞ்சரி” என்று தீர்மானம் நிறைவேறியது. மூவரும் அறிவித்தார்கள்….. “ஏலே
இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபா வாங்கிட்டு டவுனுக்குப் போய் சினிமா
பாருங்க. அதை விட்டுட்டு இந்தச் சில்லறைச் சோலி பார்த்துக்கிட்டுத் திரிஞ்சா
நல்லது கிடையாது!”
“என்ன இப்படிச் சொல்றீங்க?”
“மேல பேசாதீங்கடா! ஓடிப்போங்க!”
அவர்கள் இருவரும் தொங்கிப்போன முகத்துடன் தமக்குள் குசுகுசு என்று பேசியபடியே,
இவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனார்கள்.
“என்ன, பயலுகளை ரொம்பக் கடுசாப் பேசிப்புட்டீங்க,” என்றார் பெருமாள்.
“பின்ன என்னண்ணே… வயசுப் பசக.. என்னமாச்சும் ஏழரையைக் கூட்டிப்புட்டா
நமக்குத்தானே பிரச்சனை? சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.. இந்தப் பய நீங்க பெத்த
புள்ளை மாதிரியா இருக்கான்? ஒரு மட்டு மரியாதை கிடையாது. எதற்கெடுத்தாலும்
பதிலுக்குப் பதில் பேசிக்கிட்டு…”
“ப்ச்! என்ன பண்றது கோயிந்து! எனக்குப் புத்திர பாவத்துல சனீஸ்வரன்
இருக்கானாம். அடங்காத புள்ளைதான் பொறக்கும்னு எழுதியிருக்கு…”
அவர்களது பேச்சு, தகப்பன்களுக்கு அடங்காத தறுதலைப் பிள்ளைகள் பற்றி வெகுநேரம்
நடந்தது.
மூணு மணி வாக்கில், பெருமாள் எழுந்தார். வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்.
“திருவிழாவை நல்லா நடத்தணும். குதிரைக்கு பெயிண்ட் அடிக்கணுமில்ல? வாங்க, நாலு
பேருமாப் போயி கதவைத் திறந்து குதிரைய துடைச்சிட்டு, அப்படியே என்ன செலவாகும்னு
வெளில விசாரிச்சிட்டு வந்துடலாம்.”
பெருமாள், சின்னச்சாமி, கோவிந்தசாமி, காளமேகம் நால்வரும் இரண்டு மொபெட்களில்
கிளம்பினார்கள். வாத்தியாரது மொபெட்டின் பின்னால் பெருமாள் இருந்தார். போகையில்
வாத்தியார் கேட்டார்… “எதுக்குப் பெருமாள் திடுதிப்புன்னு கிளம்பினீங்க..
குதிரையைப் பாக்கறதுக்கு?”
பெருமாள் கனமான குரலில் சொன்னார்… “கொஞ்ச நாளா மனசே சரியில்லை… வாத்யாரே!
சாமிக்கும் பூமிக்கும் நம்ம மேல கோவம் வந்திருச்சுடானு நாலு நாள் முன்னாடி எங்க
அம்மா சொல்லுச்சு. நூறு வயசு ஆச்சு அதுக்கு! அது சொன்னது என் மனசில சாமி வாக்கு
மாதிரி பட்டுச்சு. எப்படியாச்சும் இந்த வருசம் நல்லவிதமா ஊர் கூடி, அந்த அழகர்
கால்ல விழுந்து, ‘எங்க தப்பையெல்லாம் மன்னிச்சிரு ஆண்டவா!’ன்னு  சொல்லணும். மழை
பிச்சிக்கிட்டுப் பெய்யணும். அதுவரைக்கும் நான் திங்கிறது சோறு கிடையாது
வாத்யாரே!”
மலையடிவாரத்தை அடைந்தார்கள். மாலை நாலு மணி இருக்கும். சாயங்கால வெயில்
கண்களைக் கூசியது. மலையடிவாரம் ஆதலால் குளிர்ந்த காற்றும், லேசான பச்சிலை
வாசனையும் அடித்தன. பெருமாள் சட்டென்று தோள் துண்டை எடுத்து, இடுப்பில்
அனிச்சையாகக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் போட்டபடி மண்டபத்தை நோக்கி நடந்தார்.
மண்டபத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். துருப்பிடித்த பூட்டு சங்கிலி
ஓரமாகக் கிடக்க, பீடம் காலியாக இருந்தது. ஏழெட்டு பீடித் துண்டுகள் ஓரமாகக்
கிடந்தன. கடவுள் இன்னும் சில தினங்களில் ஏறி வரும் வாகனம் இருந்த இடம்
வெறுமையாக இருந்தது.
அழகர்சாமியின் குதிரையைக் காணவில்லை!
*****
ஊர் அரண்டுபோனது. ஊழிக்காலம் வந்துவிட்டது போன்றதொரு பதற்றம் கிளம்பியிருந்தது.
தாமரைக்குளத்தில் சைக்கிள்கள் திருடு போயிருக்கின்றன. அதெல்லாம் மனித
வாகனங்கள். ஆனால், இப்போது காணாமல் போனதோ கடவுளின் குதிரை! இந்த ஊரையே கட்டிக்
காத்துக் காவல் புரிகிற அழகர்சாமியின் குதிரையைத் திடீரெனக் காணோம் என்றால்…
”இப்ப நடந்திருக்கிறது சாதாரண விஷயமில்ல… கும்பிடற சாமியோட வாகனத்துல கை
வெச்சுட்டானுக.. நாம இத்தனை ஊர் சனம் இருந்தும் சாமியோட ஒத்தைக் குதிரையைப்
பாதுகாக்க முடியலைன்னா எப்படி… அசிங்கமால்ல..?”
ஊர்க்கூட்டத்தில் கோவிந்தசாமி பொருமியபோது ராமகிருஷ்ணன் எழுந்தான். “என்ன
இப்படிப் பேசறீங்க? ஏழு ஊர் சனத்தையும் சாமிதான் பாதுகாக்குதுனு இம்புட்டு நாளா
சொல்லிட்டு இருந்தீங்க” என்றான்.
“வாயில போடுய்யா அவனை. இவனை மாதிரி தலைப்பிரட்டுப் பசங்க பயலுகளாலதான்
இப்படியெல்லாம் நடக்குது” நாலைந்து பேர் ராமகிருஷ்ணனை அடிக்கப் பாய்ந்தனர்.
சிலர் விலக்கினார்கள். சிறிய தள்ளுமுள்ளுக்குப்பின் அமைதி நிலவியது.
“அமைதியா இருங்கப்பா. பிரச்னையாகிப் போச்சு. என்ன பண்ணலாம்னு பேசறதுக்குக் கூடி
இருக்கோம். குழப்பம் பண்ணாதீங்க,” வாத்தியார் அமைதிப்படுத்தினார்.
“ஊரு கெட்டுப்போச்சு. எந்தக் காட்டுக் களவாணிப் பயலோ சாமியையே நடக்க விடணும்னு
யோசனை பண்ணி இப்படிக் கூத்துப் பண்ணிட்டான். இதுக்கு முன்னாடி சாமி வாகனத்துல
யாரும் கை வெக்கத் துணிஞ்சது கிடையாது.”
”என்ன வாத்தியாரே சொல்றீங்க? இதுக்கு முன்னால நம்மூர்ல ஏழெட்டு எருமைமாடுக
காணாமப் போகலையா? எமதர்மராஜனோட வாகனத்தையே ஓட்டிட்டுப் போயி பாலைப்
பீய்ச்சிட்டாங்க. களவாணிப் பயக. அழகருக்குப் பயப்படுவாங்களா?”
”கூறு இல்லாமப் பேசாதய்யா… அதெல்லாம் நிசமான எருமை. இப்ப காணாமப்
போயிருக்கிறதோட மதிப்பென்ன… மரியாதை என்ன?”
தாமரைக்குளத்திலும் மூலத்தைவிட மாதிரிக்குத்தான் மரியாதை. குதிரையை உருவாக்கிய
கண்ணு ஆசாரி கலங்கிய கண்களுடன் முன்னே வந்தார். “என் உசுரைக் குடுத்து செஞ்ச
குதிரைய்யா. அதைத் தொட்டவன் கை மரக்கட்டை மாதிரி ஆகிப்போகும். இது என் தொழில்
மேல சத்தியம்!”
”சாபம் விடறதெல்லாம் சரிப்பா..” என்று பெருமாள் வாய் திறந்தார். ”அடுத்து என்ன
செய்யணும்? அதைப் பத்திப் பேசுவோம். வாத்தியாரே.. விவரமானவரு நீங்க
சொல்லுங்க..”
காளமேகம் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து தொண்டையைச் செருமினார். ”இல்லாத
ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரைங்கிற மாதிரி…”
‘வாத்தியார் தன்னைக்குறித்து ஏன் பேச ஆரம்பிக்கிறார்?’ என்று ராமகிருஷ்ணனும்
கனகுவும் நினைத்தார்கள்.
“…. குதிரையில்லாட்டி பரவாயில்லை. சாமிய மட்டும் வெச்சு இந்த முறை சாமி
கும்பிட வேண்டியதுதான்…”
“யோவ்… குதிரை காணாமப் போனதுக்கு என்ன மேல் நடவடிக்கை?, அப்படிங்கறதை
பேசுவியா அதை விட்டுட்டு…”
வாத்தியார் சுதாரித்தார். “மேல் நடவடிக்கை தான… போலீஸ் கம்ளைண்ட்
குடுத்திருவோம்.”
“சரி, அப்புறம்….?”
”அப்புறம் என்ன, சப்பரம் வெச்சு சாமியத் தூக்க வேண்டியதுதான்.”
“கோட்டி புடிச்ச வாத்தி, குதிரையில்லாம ஊர்வலம் போனா அது அழகரே கிடையாதுய்யா!”
கனகு, ராமகிருஷ்ணன் காதைக் கடித்தான். “பாத்தியாடா! வாகனத்தை வெச்சிதான்
சாமிக்கு மரியாதை. மயில் இருந்தாத்தான் முருகன். குதிரை இருந்தாத்தான் அழகரு…
பனி இல்லாத மார்கழியா.. படை இல்லாத மன்னவரா?” என்று மெதுவாகப் பாடினான்.
“கரெக்ட்தானடா, தொப்பியும் கூலிங்கிளாசும் இல்லாம நாம எம்.ஜி.ஆரை நினைச்சுப்
பாக்க முடியுதா?”
இளைஞர்கள் இருவரும் தமக்குள் பேசிச் சிரிப்பதை கோவிந்தசாமியின் கண்கள்
கவனித்தன. அவர் சின்னசாமியின் காதில் கிசுகிசுத்தார். இருவரும் தமக்குள் ஏதோ
பேசிக்கொண்டார்கள்.
பெருமாள் இறுதி அறிவிப்புக்காக தொண்டையைச் செருமினார்.
“சரி… போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிர வேண்டியது. அதுக்கப்புறம் நல்ல நேரம்
பாத்து குறி கேக்க வேண்டியது. சம்மதந்தானா எல்லாருக்கும்?”
குறி கேட்கிற யோசனை உடனே ஏற்கப்பட்டது.
“ம்.. நம்ம ஊர் கோடாங்கியை வெச்சு அடிச்சுக் கேட்டுரலாமா?”
“அது சரியா வராதுங்க. வெளியூர் ஆளைக் கூட்டிட்டு வாங்க. மலையாளத்து ஆளுன்னா
மையைப் போட்டு கரெக்ட்டா சொல்லிருவான்.”
“அதுவும் சரிதான். உள்ளூர்க் கோடாங்கியை இதுல சம்மந்தப் படுத்தறது பல
வகையிலயுஞ் சிக்கல். அந்தாளு, சரியா சொல்லிட்டாச் சரி. ஒருவேளை தப்பா கிப்பா
சொல்லிட்டான்னா பேரு கெட்டுப் போயிரும்ல.. நாளப்பின்ன பொய் சொல்லிப் பிழைக்க
முடியாதில்ல. என்ன கோடாங்கி?” ஒரு பெரிய மனுஷன் விளையாட்டாகச் சொல்ல, உள்ளூர்
கோடாங்கிக்கு சட்டென்று கோபம் தலைக்கேறி விட்டது. அவர் எழுந்த வேகத்தில் குடுமி
அவிழ்ந்து தொங்கியது. அகலக் குங்குமப் பொட்டும் அவிழ்ந்த கூந்தலுமாக ஆம்பளை
பாஞ்சாலி போல் சூளுரைத்தார்.
”அவமானப்படுத்தறீங்களா என்னைய? ஏய்… இந்த ஊர்லயே எனக்குத்தாண்டா அருள்
இறங்கும்…. பாரு! என்ன நடக்குதுன்னு பாரு. யார் யாரு என்ன ஆகப் போறீங்கனு
பாரு.. எந்தச் சீமையிலிருந்து எந்தக் கொம்பனைக் கொண்டுவந்தாலும் சரி…  என்
துணை இல்லாம வாகனம் கிடைக்காது. எழுதி வெச்சுக்கங்கடா மாப்ளைகளா?” போறேன்
போறேன் என்று ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தையைச் சபையில் உதிர்த்துவிட்டு,
கோடாங்கி வெளியேறினார்.
வருத்தத்திலிருந்த பெருமாளின் முகம் மேலும் கறுத்தது.
“இத பாருங்கப்பா… ஊருக்கே நேரம் சரியில்லாமதான் என்னென்னமோ நடக்குது. சும்மா
இருந்த கோடாங்கிய இப்படி அசிங்கப்படுத்தி விரட்டி விட்டுட்டீங்களே!…
அவங்கவங்க கொஞ்சம் வாய அடக்குங்க ஏன்யா சிக்கலைப் பெருசாக்கிறீங்க?”
”சரிங்கையா, பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிம்பாங்க.. பெருமாளே
சொல்லிட்டீங்க. அப்புறமென்ன?”
”முதல் வேலையா டேசன்ல போய் ஒரு பிராது குடுத்திருவோம். யார் யாரு வர்றீங்க?”
துடிப்பாக இருந்த கூட்டத்தினர் இதற்குத் தயங்கினார்கள். உள்ளூரில் ஆயிரம் வீரம்
பேசினாலும் போலீஸென்றால் உள்ளூர பயம்தான்.
“என்னப்பா சத்தத்தையே காணம்?”
”முக்கியஸ்தர்கள்லாம் போங்க. எதுக்கு கண்டவங்களையும் கூப்பிட்டுக்கிட்டு.”
“ம்.. வாத்தியாரு, நான், சின்னசாமி, கோவிந்தசாமி, கண்ணு ஆசாரி அஞ்சு பேரும்
போறோம்.. என்னா.”
ஊர் தலையாட்டியது.
தலைவிரிக்கோலமாக வந்த கோடாங்கியைப் பார்த்ததும் சரசம்மாளுக்கு எரிச்சல்
மேலிட்டது. “ஏய்.. கூறுகெட்ட மனுசா! எதுக்கு இப்ப அவுத்துப் போட்டுக்கிட்டு
வர்ற? பொம்பளைக பாத்தா கேலி பண்ணிச் சிரிப்பாளுகளா.. மாட்டாளுகளா?”
கோடாங்கிக்குச் சுருக்கென்றது. கீழே பார்த்தார். வேட்டியெல்லாம்
ஒழுங்காய்த்தானிருக்கிறது. ”என்னடி சொல்ற பொச கெட்டவளே எல்லாம் ஒழுங்காய்த்தான
இருக்கு?”
“அடச்சீ.. குடுமியைச் சொன்னேன்யா! பொட்டச்சி கெணக்கா இப்படி
விரிச்சுப்போட்டுட்டு வர்றியே, பெத்த பிள்ளை வளந்து முருங்கை மரம் மாதிரி
நிக்குது…. நீ இன்னும் இப்படி இருக்கியே!”
கோடாங்கி பெரிய மீசையுடன் இருந்தாலும் சரசம்மா அவரைத் தன் வீட்டுக்
கன்னுக்குட்டி அளவுக்குத்தான் மதிக்கிறாள்.
கோடாங்கி தட்டி, பாட்டுப் பாடி, குறி சொல்லி, மந்திரித்து… வசியம், தாயத்து,
பில்லி, ஏவள் என்று பல வகையிலும் ஊரையும், ஊருக்குள் திரியும் அல்பாயுசு
ஆவிகளையும் அச்சுறுத்தி என்ன பயன்? கட்டின மனைவியை வசியம் பண்ணவோ, வாயைக்
கட்டவோ இயலாத மனிதனாகத்தான் கோடாங்கி இருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு பெண்.
அவளுக்கு மாரியம்மா என்று கோடாங்கி பெயர் வைத்தார். ஆனால் சரசம்மா தனது
‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெயரைச் செல்லமாக்கிவிட்டு தேவி
என்றழைக்க அந்தப் பெயர்தான் துலங்கியது என்றாலும் கோடாங்கி மட்டும் அவளை
வீட்டுக்குள் மாரி என்றுதான் அழைத்து வந்தார்.
“மாரி எங்கே?” கோடாங்கி குரலில் எரிச்சல்/
”அவளை எதுக்குத் தேடுறீங்க?”
”வெந்நீர் வெக்கச் சொல்லணும். குளிச்சுட்டு பூஜை கட்டப்போறேன்… காட்டேரி
பூஜை!”
“அது எதுக்கு?”
“என்னை இளக்காரமாப் பேசுனவங்களை நாக்குத்தள்ள வைக்கப் போறேன். சபையில் வெச்சுக்
கிண்டல் பண்ணிப்புட்டானுக.. அவனுக நாக்கைச் சுருட்டி உள்ள இழுக்கிற மாதிரி ஒரு
பூஜை போடப் போறேன். காட்டேரித் தாயே! அம்மா! காட்டேரி…” கோடாங்கியின் உடல்
வியர்த்தது. மூச்சு உஸ்ஸென்று பாம்பின் சீறலாக வெளிவந்தது. சரசம்மா
வெகுநிதானமாக கோடாங்கியை ஏற இறங்கப் பார்த்தாள்.
”சுடுதண்ணியெல்லாம் வைக்க முடியாது. உனக்கு சுடுதண்ணி வெச்சே விறகெல்லாம்
தீந்து போகுது. அப்புறம் சோறு வடிக்கிறது எப்படி? பேசாம பச்சத்தண்ணியில குளி!”
“வெந்நீர்லதான் குளிக்கணும்… நீ போட்டுத் தரவேணாம். எங்க என் பொண்ணு?
அதுகிட்ட சொன்னா போட்டுக்குடுக்கும். பூஜை கட்டணும்னு சொல்றேன்ல?”
“குடுப்பா குடுப்பா.. எதை வெச்சு போட்டுக் குடுப்பா? இதோ பாரு. நீ பூஜை கட்டு,
கூட இன்னொரு பொண்டாட்டியும் வேணா கட்டு. சுடுதண்ணி வேணும்னு என் தாலிய மட்டும்
அறுக்காத. விறகு ஒடிச்சே என் இடுப்பு ஒடிஞ்சு போச்சு!”
“மாரி எங்கே? அதைச் சொல்லு.”
“அவ எங்கயோ தோட்டத்துக்குப் போனா, கீரை பிடுங்கிட்டு வர்றதுக்கு…”
வேறு வழியின்றி கோடாங்கி பச்சைத் தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றினார். அவர்
சர்வீஸில் பார்த்த எல்லா காத்து கருப்புகளையும்விட கடுமையான பெண் யாரென்றால்,
அது சரசம்மாதான்!
கோடாங்கியின் மனதில் சரசம்மா, காட்டேரி, சில குறளிப் பேய்கள் மற்றும் சில
காத்துக் கருப்புகள் ஓடிக்கொண்டு இருந்த அதே நேரத்தில், ஊரைத்தாண்டி
விலகியிருந்த குளத்தின் கரையில் ஒரு சைக்கிள் போய்க்கொண்டு இருக்கிறது.
பெருமாளின் மகனான ராமகிருஷ்ணன் ஓட்டுகிறான். முன்புற பாரில், மாரி
அமர்ந்திருக்கிறாள்.
காதல் சிட்டுகள் சைக்கிளில் விரைந்துபோய் தோப்புக்குள் மறைகின்றனர். ஆள்
காட்டிப் பறவைகளான கனகுவும், சீரங்கனும் தோப்பின் வேலியோரம் மாங்காய்ப்
பிஞ்சுகளைப் பொறுக்கித் தின்றபடி காவல் இருக்கின்றனர். ஊரில் என்ன களேபரங்கள்
இருந்தாலும் இப்படியாகப்பட்ட விஷயங்கள் ஒருபுறம் சத்தம் இல்லாமல்
நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
போலீஸ் ஸ்டேஷன், டவுனில் நடுநாயகமாக அமைந்து இருந்தது. ஸ்டேஷனுக்குப் போகணும்
என்றாலே ஒரு பயம் சூழ்ந்து நா வறண்டுவிடுகிறது. ஐந்து பேரும் ஸ்டேஷனுக்குள்
நுழைந்தபோது ஏட்டய்யா மட்டும் இருந்தார்.
“வணக்கங்க…”
“ம்.. வாங்க. என்னா சமாசாரம்?”
“தாமரைக்குளத்திலிருந்து வர்றோமுங்க… ஒரு பிராது குடுக்கணும்…”
“என்ன… பிராது… எதுவும் கொலை பழி ஆயிப்போச்சா?”
“சேச்சே, அதெல்லாமில்லீங்க.. குதிரை காணாமப்போயிருச்சுங்க!”
ஏட்டு மேலும் கீழுமாகப் பார்த்தார். “ஏன்யா… இதென்ன போலீஸ் ஸ்டேஷனா, மாட்டுத்
தாவணியா? குதிரை காணம்னா தேடிப்பாருங்க. கழுத எங்கயாவது மேஞ்சுக்கிட்டு
இருக்கும். இங்க எதுக்கய்யா வந்தீங்க?” அதட்டினார் ஏட்டய்யா.
இவர்களுக்கு உதறியது. என்னதான் உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் என்றாலும் காக்கி
உடைக்கென்று ஒரு கலவரம் இருக்கிறது.
“ஏதாச்சும் அடிதடி வெட்டுக் குத்துன்னா பரவாயில்ல. ரூவா, நகை திருடுபோனா பரவா
இல்ல.. குதிரை காணாமப் போச்சு ஆட்டுக்குட்டி காணாமப் போச்சுனு இங்க வந்தா
எப்படி…? எங்கள என்ன அதிகாரினு நினச்சியா? ஆடு மேய்க்கிறவன்னு நினச்சியா?”
இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏட்டய்யா இடைமறிக்காமல் இருந்தால்
ஒட்டுமொத்த விவரத்தையும் கொட்டிவிடலாம். நெஞ்சுக்குள் இருக்கிறது. கோர்வையாக
வரவில்லை.
“யாருதுய்யா குதிரை?”
“அழகர்சாமியோடதுங்க!”
“யாருய்யா உங்கள்ல அழகர்சாமி?” இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
”உங்கள்ல யாருமே அழகர்சாமி இல்லையா… முழிக்கறீங்க?”
“இல்லீங்க.”
“பறிகுடுத்த ஆளு வராம நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்க?”
காளமேகம் சுதாரித்து, “சார்… அழகர்சாமிங்கறது சாமிங்க! சித்திரைத்
திருவிழாவுல வருவாரே.. அவருங்க.”
ஏட்டய்யா எரிச்சலுடன் எழுந்து முறைத்தபடி காளமேகத்தின் அருகே வந்தார்.
“ஊதுய்யா!”
காளமேகம் திகைப்பாய்… “எதுக்குங்க சார்?”
“ஊது சொல்றேன்.. வரவர ஸ்டேஷனுக்கு வர்றோம்ங்கிற மட்டுமரியாதையில்லாம தண்ணி
அடிச்சிட்டா வர்றீங்க.. ஊது முதல்ல…!” என்றபடி மூஞ்சியை வாத்தியாருக்கு நேரே
நீட்டினார்.
வேறுவழியின்றி வாத்தியார் ஊதினார். ஊதச் சொன்னது பெருந்தவறென்று ஏட்டய்யா
உணர்ந்தார். மூக்குப்பொடி வாசம், ஒரு விதமாக அடித்து வயிற்றைக் குமட்டியது.
“எனக்குக் குடிக்கிற பழக்கம் இல்லீங்கய்யா.”
“எழவெடுத்த மனுசா.. குடிச்சவன்கிட்டகூட இம்புட்டு வீச்சம் அடிக்காது. ச்சேய்!”
அப்போது எஸ்.ஐ. உள்ளே நுழைந்தார். “என்னய்யா விஷயம்?”
“அய்யா.. குதிரையக் காணோம்னு பிராது குடுக்க வந்திருக்காங்கய்யா,
தாமரைக்குளத்திலிருந்து.”
எஸ்.ஐ. சிரித்தார். “ஏங்க.. தேடிப் பாக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாமா
ஸ்டேஷனுக்கு வர்றது?”
பெருமாள் தீர்மானித்தார். தடுமாறாமல் பேசும் உறுதியுடன் துவங்கினார். ”அய்யா,
காணாமப் போனது குதிரையில்லீங்க!”
“யோவ்! இப்பதான சொன்ன. அதுக்குள்ள மாத்திப் பேசற?” ஏட்டய்யா பதறினார்.
“இல்லீங்கய்யா, குதிரைதான் காணாமப் போனது. ஆனா, நிஜக் குதிரை இல்லீங்க. குதிரை
வாகனம். அழகர்சாமியோடது. ஊருக்கு வெளியே மலையடிவார மண்டபத்துல இருந்துச்சு.
அதைத்தாங்க காணோம்.”
ஏட்டய்யா, ‘அடடா, சாமி சமாசாரம்! இது தெரியாமப் பேசிட்டோமே..’ என்று மனசுக்குள்
பதறியபடியே, “ஏன்யா… முதல்லயே விவரமா சொல்ல வேணாமா?” என்றார்.
எஸ்.ஐ. யோசித்து, “ம்… சரி, என்ன நடந்ததுன்னு ஒரு புகார் மனு எழுதிக்
குடுங்க!” என்று சொல்ல, காளமேகம் வாத்தியார் அமர்ந்து மனு எழுதினார்.
எஸ்.ஐ. சற்று தீவிரமாக யோசித்தவர் மெதுவாகக் கேட்டார். “ஏங்க… குதிரை
திருடுதான் போயிருக்கும்னு நினைக்கிறீங்களா?”
”ஆமாங்க! ரெண்டாள் சேர்ந்துதான் அதை நகர்த்தவே முடியும். நல்ல வெயிட்டான
குதிரை. கெட்டியான மரத்துல செஞ்சது.” என்றார் கண்ணு ஆசாரி.
“ம்.. அது சரி! அதை எதுக்குய்யா ஒருத்தன் திருடணும்! அதை வெச்சு என்ன பண்ண
முடியும். என்ன பிரயோஜனம் அதனால!”
ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மைதான்.. மரத்தாலான குதிரையால்
அந்த அழகர்சாமிக்கு மட்டும்தான் பிரயோஜனம். மனிதர்களுக்கு அதனால் ஆகக்கூடிய
பயன் என்ன?
“உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?”
வீராச்சாமியும் சின்னச்சாமியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வீராச்சாமி
பெருமாளைப் பார்த்தார்.
“எங்க மனசுல ஒண்ணு இருக்கு பெருமாளு.. அதை அய்யாகிட்ட சொல்லலாமா.”
”தாராளமா சொல்லுங்க.. இதென்ன கேள்வி?”
“சரி.. பொது விஷயம்.. அதனால நான் தாட்சணியம் பார்க்காமச் சொல்றேன். இதோ
இருக்காரே பெருமாளு… இவர் மகன் இராமகிருஷ்ணன் மேலயும், அவன் கூட்டாளிக
மேலயும் சந்தேகம் இருக்குங்க..”
பெருமாள் திடுக்கிட்டார். ’தான் மனுநீதிச் சோழனாக மாற வேண்டிவருமோ?’
சற்று நேரம் அமைதி நிலவியது. கண்ணு ஆசாரி தொண்டையைச் செருமினார். “சீச்சீ..
இருக்காதுங்க. எங்க ஊர்ப் பயலுக இந்தக் காரியத்தைச் செய்யாதுங்க. அருமையான
மரத்துல செஞ்ச குதுர.. வந்த விலைக்கு வித்துக் காசு பார்த்துரலாம்னு எவனோ
களவாணிப் பய செஞ்ச காரியமா இருக்கும்?”
பெருமாளுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. நண்பர்கள் சுமத்திய பாவத்திலிருந்து
கண்ணு ஆசாரி அவரை ரட்சித்துவிட, ஆசாரியை விசுவாசத்துடன் நோக்கினார் பெருமாள்.
எஸ்.ஐ. எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னார். “ரூமுக்குள்ள
இருக்கேன். ஒவ்வொருத்தரா உள்ள தனித்தனியா வரணும். வந்து அவங்க மனசுல உள்ளதை,
யாரு மேல சந்தேகம் என்ன விவரம்கிறதை தெளிவா சொல்லணும். என்ன?”
”சரிங்க சார்!”
எஸ்.ஐ. அறைக்குள் சென்று அமர்ந்தார்.
ஐந்து பேரும் தனித்தனியே உள்ளே போய் பேசிவிட்டு வந்தனர். தாமரைக்
குளத்துக்காரர்களிடம் தான் இந்த யுக்தியைப் பயன்படுத்தியது அசல்
பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஐ. புரிந்து கொண்டார். ஐவரின் கற்பனைவளமும் எல்லை
மீறியதாக இருந்தது. அது உள்ளூர் பெருமாள்  மகனில் துவங்கி, பக்கத்து ஊர்,
பக்கத்து மாநிலம் வரை  விரிந்தது. எஸ். ஐ.க்கு தலை சுற்றியது. ஏட்டையாவை
அழைத்தார்.
”அய்யா… ஏதும் க்ளூ கிடைச்சதுங்களா?”
“நீ வேற… அவனுக உன்னையும், என்னையும் தவிர எல்லாரைப் பத்தியும் சந்தேகமாச்
சொல்றாங்க!”
“அப்படிங்களா”
“யோவ் ..இதுல என்ன சிக்கல்னா இந்தப் பிரச்சினைய வச்சு இவங்களுக்கும் பக்கத்து
ஊர்க்காரங்களுக்கும் சண்டை வரதுக்கும் சான்ஸ் இருக்கு,பொதுப் பிரச்சினை,கலவரம்
அப்படி இப்படின்னு சிக்கலாயிரக் கூடாது,அதனால நீயும் வேலுவும் பொய் அங்க டூட்டி
பாருங்க,ஊர்லையே இருக்கணும்,அது தவிர மப்டி யில் ஒரு ஆளை அங்க
நிப்பாட்டனும்,அப்பத்தான் ஏதாச்சும்  துப்பு கிடைக்கும்!”
“சரிங்கய்யா.. நம்ம கான்ஸ்டபிள் கைலாசத்துக்கு அந்த ஊர்லதாங்க பொண்ணு
எடுத்திருக்கு. நம்ம சந்திரனை அந்த வீட்டுக்கு விருந்தாளி மாதிரி அனுப்பிரலாம்.
யாருக்கும் சந்தேகம் வராதுங்கய்யா!”
அடுத்த அரைமணி நேரத்தில் ஏட்டும், கான்ஸ்டபிள் வேலுவும் உடுப்புடன் ஆலமரத்தடி
மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள். மஃப்டி போலீஸ் சந்திரம் மஞ்சள் பையுடன்
விருந்தாளி போல வந்து ஊருக்குள் இறங்கினார்.
குறி கேட்க ஊர்சனம் கூடி இருந்தது. வெளியூர் ஆள் மண்டபத்தில் அமர்ந்திருந்தா.
அவன் முன்னால் வெள்ளியால் செய்யப்பட்ட நாகமும், கறுப்பு நிற வழவழப்பான கல்
ஒன்றும் இருந்தன. தவிர, இடதுபுறம் நரியின் தலை ஒன்று வைத்திருந்தான்.
சிறுவர்கள் அதனை ஆர்வமும் குறுகுறுப்புமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
உள்ளூர்  கோடாங்கி அவர் வீட்டுத் திண்ணையில், கைவிடப்பட்ட அநாதையாக
உட்கார்ந்திருந்தார். சரசம்மாவும் மாரியும் கிளம்புகிற அவசரத்தில் இருந்தனர்.
சரசம்மா இரண்டாம் முறையாக கண்ணாடி பார்க்க, ஏற்கனவே ஃபுல் மேக்கப்பில் இருந்த
மாரி மீண்டும் ஒரு முறை கண்ணாடியை தாயிடமிருந்து பிடுங்கி ஸ்டிக்கர் பொட்டைச்
சரியாக ஒட்டினாள்.
கோடாங்கி குமுறினார். “ஏலா! இந்த ஊர்ப் பயக என்னைய மதிக்காம வெளியூர்ல இருந்து
குறிகாரனைக் கூட்டிட்டு வந்திருக்காங்களேனு நான் வயிறெரிஞ்சு
உக்கார்ந்திருக்கேன்.. நீயும் உன் மகளும் சிங்காரிச்சிக்கிட்டு அங்கன
போறிங்களா?”
”ஏன் , போனா என்ன? உன்னைய யாரு திண்ணைய தேய்ச்சுக்கிட்டு உக்காரச் சொன்னது?
நீயும் வந்து உன்னையொத்தவன் எப்படி குறி சொல்றான்னு  பாத்துத் தெரிஞ்சுக்க!”
“ஏய்… எதைப் பத்தி வேணாப் பேசு.. எந்தொழிலைப் பத்தி தாழ்ச்சியாப் பேசாதே!
இந்தக் காலத்துல பகட்டுக்குத்தாண்டி மதிப்பு. என்னை மாதிரி தொழில்காரனை
இருபத்தேழு ஜில்லாவுலயும் பாக்க முடியாது.. தெரிஞ்சுக்க!”
மாரி தந்தையைப் பரிதாபத்துடன் பார்த்தாள். இது அவரது வழக்கமான வசனம்.
இருபத்தேழு ஜில்லா என்று வருசக்கணக்காக சொல்லிக்க்கொண்டு இருக்கிறார், அது
தப்பான தகவல் என்று தெரியாமலேயே! அவர் குறி சொல்லும் லட்சணமும் இப்படித் தான்
என்று ஊர் மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.
”உங்காத்தாதான் புத்தி கெட்டுப் போறா, நீயுமா மாரி? என் மகளா இருந்துக்கிட்டு
அசலூர்க்காரன் என்ன சொல்றான்னு கேக்கப் போலாமா?”
மாரி திரைப்படங்களின் பாதிப்பில். “உங்களை மாதிரி உள்ளவங்க மனசுல போட்டி
இருக்கலாம். பொறாமை இருக்கக்கூடாதுப்பா” என்றாள். அஜீத்திடமோ, விஜய்யிடமோ
இதைச்  சொல்கிற பாவனையில்!
“என்னமோ பண்ணித் தொலைங்க” என்று பெருமூச்சு விட்டார் கோடாங்கி. சரசம்மாவும்,
மாரியும் கிளம்பினார்கள்.
கூட்டத்தில் மாரியின் கண்கள் ராமகிருஷ்ணனைத் தேடின. கனகு, சீரங்கனுடன் ஓரமாக
நின்று சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு மாரியைக் கண்டதும் முகம்
பிரகாசமடைந்தது.
“ம்… சொல்லுங்க! இப்ப என்ன தெரியணும்?” என்றான் குறிகாரன். தமிழ் சுத்தமாக
இருந்தது.
“சாமிக்கு மலையாளம்தானா?”
”ஏன் கேக்கிற?”
“பேச்சைப் பாத்தா மலையாளம் மாதிரி தெரியலையே?”
“நான் எல்லா ஊருக்கும் போறவன். எல்லாப் பேச்சும் எம் பேச்சுதான். எல்லா ஊர்த்
தண்ணியும் என் தண்ணிதான்.. புரியுதா?” என்றவனனின் கண்கள் சிவந்திருந்தன.
இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். பாட்டில் பத்திரமாயிருந்தது.
கனகு சொன்னான். “ராமகிருஷ்ணா, இவன் நிச்சயம் மலையாளத்து மந்திரவாதி கிடையாது.
சரியான ஃப்ராடு மாதிரி இருக்கான். இவனைக் கூப்பிட்டு வந்த ஆள் யாரு?”
“முனியாண்டிதான் கூப்பிடப் போனாப்ல” என்றான் சீரங்கன்.
“அப்ப சரிதான்! வாங்கிட்டுப் போன காசுல கொஞ்சத்தை ஒதுக்கிட்டு சீப் ரேட்ல
இவனைக் கூட்டிட்டு வந்துட்டான் போலருக்கு!”
குறிகாரன் கண்ணை மூடி தியானித்து, பிறகு கண் திறந்தான்.
“சொல்லுங்க… என்ன தெரியணும்?”
“வாகனம் போன திசை… வழி தெரியணும். சாமி குத்தம் எதுவும் வந்திரக்கூடாது.
ஏற்கனவே ஊர்ல மழைத் தண்ணி குறைஞ்சு போயி சம்சாரியெல்லாம் சிரமப்படறோம்ங்க!”
“ம்…….” மறுபடி கண்களை மூடினான்.. திறந்தான்.
“வாகனம் காணாமப் போனது சாமியோட விளையாட்டு! நீங்க சரியானபடி சாமியை நினைக்கலை.
அதான் இப்ப இப்படி ஒரு அறிகுறியைக் காமிச்சிருக்கு!”
பெருமாள் பதறினார், “அய்யோ! இல்லீங்களே… இந்த வருசம் சிறப்பா
கொண்டாடனும்னுதான கமிட்டி கூடி முடிவு பண்ணோம்.. அதுக்குள்ளாற.”
”ப்ச்! நடுவுல பேசாதீங்க. திருஷ்டிக்கு நடுவுல ஊடாடக் கூடாது. யாருப்பா அது?
சத்தம் போடாதீங்க!”
சுற்றும் முற்றும் பார்த்த குறிகாரன் ஒரு நபரை அழைத்தான். “வா இப்படி!”
அழைக்கப்பட்ட நபர் மஃப்டியில் இருந்த போலீஸான சந்திரன்.
”சாமி.. இவர் வெளியூரு விருந்தாளியா வந்தவரு!”
“பரவாயில்லை…. அது ரொம்ப விசேஷமாச்சே! இப்படி வந்து எதிரே உக்காரு!”
சந்திரன் குறிகாரன் எதிரே வந்து அமர்ந்தார். குறிகாரன் தனது பக்கத்திலிருந்த
ஒரு பெட்டியைத் திறந்தான். “பயப்படாத! இது தலைச்சன் புள்ளை மண்டை ஓடு. இதை
உள்ளங்கைல அமுத்தினாப்ல புடிச்சுக்க!”
துணியில் சுற்றப் பட்டிருந்த ஒரு சிறிய உருண்டையான வஸ்துவைக் கொடுத்தான்.
சந்திரனுக்கு உதறல் எடுத்தது.
“ம்.. புடி! கண்ணை மூடு!”
சந்திரன் கை நடுங்க அதைப் ப்டித்துக் கொள்வதை ஏட்டும், மற்றொரு போலீஸான
வேலுவும் ஆர்வத்துடன் பார்த்தனர். ஏட்டு அவனிடம் கிசுகிசுத்தார். “பாருய்யா!
நம்ம டிபார்ட்மெண்ட் எல்லாவிதத்துலயும் சிறப்பா பணியாற்றுது பாத்தியா…”
”ஆமாங்கய்யா!”
குறிகாரன் இடி போல முழங்கும் குரலில் கேட்டான். “கண்ணுக்குள்ள என்னா தெரியுது?”
“இருட்டா இருக்கு! அங்கங்க சிகப்பா தெரியுது!”
“ம்…. அதைத் தவிர, என்ன தெரியுது? மஞ்சளா ஒண்ணு அசையுதா?”
“ம்ஹூம்!”
“நல்லாப் பாரு!”
”வெள்ளையாத்தாங்க ஏதோ தெரியுது!”
“ஆஹா!” என்றான் குறிகாரன். “அது அசையுதா?”
அவன் முகம் மலர்ந்தது “உத்தரவு கிடைச்சிடுச்சு.. ம்… உத்தரவு
கிடைச்சிடுச்சு!” என்றபடியே கண்களை மூடி, வாய்க்குள் ஆவேசமாக மந்திரங்களை
முணுமுணுத்தான். உடல் குலுங்கியது.
ஊர் சனம் வாயடைத்துப்போய் வெளியூர் கதாநாயகனைப் பார்த்தது. பருத்த தொந்தியும்,
மார்பு நிறைய விபூதியும், நெற்றியில் ரத்தத் திலகமுமாய் இருந்தான். அவன் காதில்
இருந்த கடுக்கன் கூடியிருந்த அத்தனை பெண்களின் கவனத்தையும் ஈர்த்தது. கையில்
தங்க மோதிரங்கள் செம்புக்காப்பு.
கண்ணைத் திறக்காமலேயே ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சந்திரனிடம் நீட்டினான்
குறிகாரன்.
“பத்துக்குள்ள நம்பர் ஒண்ணூ சொல்லு!”
“ஒண்ணு” என்றார் சந்திரன்.
“ம்… சரி, மேலே எறி இதை!”
சந்திரன் மேலே எறிந்த எலுமிச்சம் பழம் ஓர் இடத்தில் விழுந்து உருண்டோடியது.
”ம்.. திசை தெரிஞ்சுபோச்சு!” என்றபடி பெருமாளைப் பார்த்தான்.
“அப்படிங்களா… எப்படிங்க?”
“எலுமிச்சம் பழம் கீழே விழுந்து மேற்கு முகமா உருண்டுச்சில்ல… மேற்குத்
திசையிலதான் குதிரை இருக்குது.”
“ஓஹோ!”
“இந்தாளு கண்ணுக்குள்ள வெள்ளையா ஒரு ரூபம் அசைஞ்சதுனு சொல்லலே.. அது என்னது?
குதிரை.. வெள்ளைக் குதிரை!”
”அப்படிங்களா!” எல்லோரும் பிரமிப்பாகப் பார்த்தார்கள்.
“நம்பர் கேட்டப்ப இந்தாளு ஒண்ணுனு சொன்னான்ல! ஒரே நாள்ல தகவல் வரும். இல்லை
குதிரையே வந்தாலும் வரும். ஏன்னா, மனசுக்குள்ளயே ஒரு மந்திரத்தை சொல்லி
வருந்தியிருக்கேன்.  உங்க பிரச்சனை முடிஞ்சாச்சு!” கை நிறைய குங்குமத்தை அள்ளி
சந்திரனின் நெற்றியில் அப்பினான் குறிகாரன்.
“நானும் பல இடங்கள்ல பார்த்திருக்கேன். கேட்டவுடனே அருள் இறங்கி துப்பு சொன்னது
நீதான்! என் வாக்குல சக்தி இருக்கா. நாக்குல சூலி இருக்கா. இன்னிலேர்ந்து
இந்தாளோட கடாச்சம் உனக்குப் பரிபூரணமா இருக்கு!”
மஃப்டி சந்திரனின் வயிற்றுக்குள் பேரலைகள் புரண்டன.. ”சாமி!” அவர் நாக்கு
குழறியது. அவர் தலையில் கொஞ்சம் நீர் எடுத்துத் தெளித்தான் குறிகாரன்.
“இந்த செகண்டுலியிருந்து நீ ஆத்தாளோட புள்ள. எப்ப வேணா அவ உன்கிட்ட வருவா. உன்
மூலமா ஜனங்களுக்கு அருள் வாக்கு தருவா! போ!”
வரம் போலவும் , சாபம் போலவும் குறிகாரன் சொல்ல, சந்திரன் உடல் சிலிர்த்து
அப்படியே அமர்ந்திருந்தார். கூட்டம் கலைந்தது. குறிகாரனை அழைத்துக்கொண்டு பெரிய
மனிதர்கள் கிளம்பினார்கள். சின்னச்சாமி வீட்டு மாடியில் குறிகாரன் தங்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
எஸ்.ஐ. வந்து இறங்கினார். நெற்றியில் விபூதியும், கண்களில் பிரமிப்புமாய்
ஏட்டும், கான்ஸ்டபிளும்  நின்றிருந்தனர். மஃப்டி போலீஸ் மந்திரித்து விட்ட கோழி
மாதிரி நெற்றியில் அப்பிய குங்குமத்துடன் எதிரே வந்து நின்று அனிச்சையாய்
சல்யூட் அடிக்க எத்தனித்தார்.
“அடச் சீ! கையைத் தூக்காத! என்னய்யா இது கோலம்?”
ஏட்டய்யா பெருமிதமாக, “சார்! பிராப்ளம் சால்வ்ட் சார்! எந்தக் கேஸ்லயும்
இம்புட்டு ஈஸியா துப்புக் கிடைச்சது கிடையாதுங்கய்யா!” என்றார்.
“என்னய்யா சொல்ற?”
“அமா சார். ஃபைண்ட் த லொகேஷன் சார்! மேற்காலதான் குதிரை இருக்கு. ஒரே நாள்ல
கிடைச்சிடும் சார்!”
“யார்யா சொன்னது?”
“நம்ம சந்திரன்தான் சார்!”
“என்னய்யா, நிஜமாவா?”
”அப்படித்தான் சார் மெஸேஜ் வந்திருக்கு!”
“எங்கேர்ந்து?”
”ஸோர்ஸ் ஆஃப் இன்ஃபர்மேஷன் வந்து… ஆத்தா சார்.. சூலி!”
“என்னய்யா உளர்றே.”
”நான் விவரமா சொல்றேன் சார்” என்று நடந்ததை விவரித்தார் ஏட்டைய்யா. எஸ்.ஐ.க்கு
முகமெல்லாம் கடுப்பு. “என்னய்யா இது பைத்தியக்காரத்தனம்? ஊர்க்காரன் அவன்
மனச்சாந்திக்கு ஆயிரம் பண்ணுவான். கூடச் சேந்து நீங்களும் கூத்துப்
பண்றீங்களா?”
”சாமி மேட்டரு சார்!”
“பாருங்க, மூணு பேரும் இங்க டூட்டில இருக்கீங்க… புரியுதா? ஊருக்குள்ள
பிரச்சனை வந்திரக்கூடாது. நீங்க அதுல கவனமாக இருக்கணும். சந்திரன் அங்கங்க
பேச்சு குடுத்து திருட்டைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு பார்க்கணும்.
அதை விட்டுட்டு இப்படி இருக்கீங்களே!”
“ஸாரி சார்!”
நாலு திட்டுத் திட்டிவிட்டு, எஸ்.ஐ. போய்விட்டார். இன்னும் ஒரு வித அரை மயக்க
நிலையில் இருப்பது போலத் தெரிந்த சந்திரன் அவசரமாக ஓடி வந்து ஏட்டையாவைத்
தேடினார். டீக்கடையில் காராச்சேவு வாங்கித் தின்றபடி இருந்த அவரை சைகை செய்து
கூப்பிட்டார் சந்திரன்.
“என்ன சந்திரா?”
”கலவரம் வரும் போலத் தெரியுது ஏட்டய்யா…. எஸ்.ஐ.க்கு மெசேஜ் அனுப்புங்க!”
“என்ன சொல்ற?”
“ஆமா… பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி… இன்னும் ஏழெட்டு பேரு கையில
டார்ச் லைட், பெட்ரோமாக்ஸ், வேல்கம்பு எல்லாம் எடுத்துக்கிட்டுப் போறாங்க!”
“அப்படியா” என்று பதறினார் ஏட்டய்யா.
அவரும் வேலுவும் சந்திரனுடன் விரைந்தனர். வழி மறித்தனர்.
”எங்கய்யா போறீங்க எல்லாரும்… கைல வெப்பன்ஸோட?”
”அது வந்து….”
“அதிகாரிங்க நாங்க இருக்கும்போதே என்ன தைரியம் உங்களுக்கு…. ம்? கலவரமா
பண்ணப் போறீங்க்?”
“அய்யய்யோ… அதில்லீங்க! நாங்க வேற சோலிக்கில்ல போறோம்!”
“வேற என்னய்யா சோலி?”
“முயல் பிடிக்கப் போறோங்க!”
“முயல் புடிக்கவா?”
”ஆமாங்க! காட்டு முயல்க நிறைய கிளம்பி வந்து திரியும். மாசத்துக்க ஒரு தரம்
இப்படிப் போறது!”
ஏட்டையாவுக்குச் சபலம் தட்டியது.
“எங்களுக்கு டவுட்டா இருக்கு! நாங்களும் வர்றோம்”
“தாராளமா வாங்க.. நாளைக்கு அதிகாரிகளுக்கு முயல்கறி வறுவல் குடுத்துருவோம்!”
”சரி” என்று கிளம்பினார்கள். சந்திரனும் உடன் வந்தார். ஏட்டையா காதைக்
கடித்தார். “துப்புக் குடுக்கிற லட்சணத்தைப் பாரு. நீயே சண்டையக் கிளப்பி
விட்டுருவ போலிருக்கே!”
“நான் என்னத்தைக் கண்டேன்… இவனுக கம்பும், லைட்டுமா கிளம்புனா?”
மேற்கு முகமாக நடந்தார்கள். மலை அடிவாரத்தை நோக்கித் தாழ்ந்த குரலில் பேசிக்
கொண்டு போனார்கள். சற்றுத் தள்ளித்தான் வாகனம் காணாமல் போன மண்டபம் இருக்கிறது.
நான்கைந்து டார்ச்சுகள் முன்புற இருட்டைத் துழாவ நடந்தார்கள். பூச்சிகளின் ஓசை
மட்டும் அச்சம் தரும் விதத்தில் ஒலித்துக்கொண்டு இருந்தது. மண்டபத்தில் சற்று
இளைப்பாறிவிட்டு அதன் பிறகு முயல்களைத் தேடும் உத்தேசத்துடன் மண்டபம் நோக்கிப்
போனார்கள்.
“பெருமாளு…. அது என்ன? என்னமோ அசையற மாதிரி இருக்கே?”
சட்டென்று அனைவரும் நின்றனர். ஒரு வித பீதி மின்னலாக அனைவர் மனதிலும் எழுந்தது.
சந்திரனுக்கு தலைப்பிள்ளை மண்டை ஓடு மனதில் வந்து பயமுறுத்தியது.
“ஆமா, எருமையா இருக்குமா? ஏய் ஒரே ஒரு டார்ச்சை மட்டும் அடிங்க. எல்லாரும்
அப்படியே பம்மி உக்காந்துக்குங்க!”
அனைவரும் பதுங்க, வாத்தியார் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த அசைவின் மீது
டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.
அங்கே ஒரு குதிரை நின்றிருந்தது. நிஜமான குதிரை!